ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு: இந்திய வீரர் ஒருவர் உயிரிழப்பு!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒரு வீரர் படுகாயமடைந்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதல்களுக்கு இந்தியத் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டும் வருகிறது.
சில நாட்கள் ஓய்ந்திருந்த மோதல் மீண்டும் தலைதூக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதியில் இன்று பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய நிலைகளை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு வீரர் படுகாயமடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது. இதனால் எல்லைப் பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.