இந்தியாவில் பரவும் பன்றிக் காய்ச்சல் வைரஸின் வீரியம் அதிகரிப்பு
டெல்லி: தற்போது இந்தியாவில் பரவி வரும் பன்றிக் காய்ச்சல் வைரஸ் மிகவும் அபாயகரமானது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது. தற்போது பரவி வரும் பன்றிக் காய்ச்சல் வைரஸ் முன்பு பரவிய அதே வைரஸ் தான். அது தன்னைத் தானே மாற்றிக் கொண்டு அபாயகரமாகவில்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது இந்தியாவில் பரவும் பன்றிக் காய்ச்சல் வைரஸ் மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தன்னை தானே அபாயகரமானதாக மாற்றிக் கொண்டுள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தற்போது பரவும் வைரஸின் வீரியமும் அதிகரித்துள்ளது அமெரிக்காவில் உள்ள எம்.ஐ.டி.யில் செய்யப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பலி
மார்ச் 9ம் தேதி வரை இந்தியாவில் பன்றிக் காய்ச்சல் தாக்கி 1, 482 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 26 ஆயிரம் பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எண்ணிக்கை உயர்வு
2009ம் ஆண்டில் இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்கு 981 பேர் பலியாகினர். இந்த பலி எண்ணிக்கை 2010ல் 1, 763 ஆகவும், 2011ல் 75 ஆகவும், 2012ல் 405 ஆகவும், 2013ல் 699 ஆகவும், 2014ல் 238 ஆகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள்தொகை
வைரஸின் வீரியம் அதிகரித்துள்ளது ஒரு பக்கம் இருந்தாலும், இந்தியாவில் உள்ள அதிக மக்கள் தொகை, ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வைரஸ் எளிதில் பரவக்கூடிய சூழல் உள்ளிட்டவற்றால் வைரஸ் வேகமாக பரவலாம் என்று ஆய்வில் ஈடுபட்ட பேராசிரியர் சசிசேகரன் இந்தியாஸ்பெண்ட்.காமிடம் தெரிவித்துள்ளார்.

ஸ்பானிஷ் ப்ளூ
தற்போது இந்தியாவில் பரவி வருவதாக இந்திய அரசு நம்பும் வைரஸின் வகை ஓராண்டுக்குள் 74 நாடுகளில் பரவியுள்ளது. வைரஸின் மரபணு உருவம் 1918ம் ஆண்டு 4 கோடிக்கும் அதிகமானோரின் உயிரை பறித்த ஸ்பானிஷ் ப்ளூ போன்று உள்ளது என்று கூறியுள்ளார் சசிசேகரன்.












Click it and Unblock the Notifications