’வாவ்’ நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில்.. இந்தியாவிலேயே முதல்முறை.. எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
கொல்கத்தா: நாட்டிலேயே முதல் முறையாக கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் நீருக்கடியில் செல்லும் வகையில் வழித்தடம் தயாராகி வருகிறது. இந்த மெட்ரோ ரயில் சேவை வரும் டிசம்பர் மாத இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சாலைகளில் வாகன போக்குவரத்து நெரிசலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால், பொது போக்குவரத்திலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. தொலை தூர பயணங்களுக்கு ரயில் , பேருந்து, விமானம் ஆகியவை பொது போக்குவரத்திற்காக இயக்கப்பட்டு வரும் நிலையில், நகர்புறங்களில் தற்போது மெட்ரோ ரயில்கள் பயணிகளின் போக்குவரத்து தேவையை பெரிதும் தீர்த்து வருகிறது.

சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற பெரு நகரங்களில் புறநகர் மின்சார ரயில்களிலும் சாலை வழியிலான போக்குவரத்து நெரிசலிலும் கடுமையான கூட்ட நெரிசல் காணப்படும். இதனால் பயணிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாக இந்த மெட்ரோ ரயில்கள் உள்ளன. நகர கட்டமைப்புகளுக்கு ஏற்ப மெட்ரோ ரயில்கள் மேம்பாலங்கள் வழியாகவும் பூமிக்கடியில் சுரங்கம் வாயிலாகவும் இயக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் பொறியியல் அதிசயம் என்று சொல்லும் அளவுக்கு மேற்கு வங்காளத்தில் நீருக்கடியில் மெட்ரோ ரயில்கள் இயங்க இருக்கின்றன. இந்தியாவில் முதல் முறையாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரெயில் சேவையை கொல்கத்தா மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் தொடங்க உள்ளது. கொல்கத்தாவில் இருந்து ஹவுரா பகுதி வரை ஹூக்ளி ஆற்றின் நீருக்கு அடியில் சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது.
இந்த சுரங்கப்பாதைக்குள் மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான சோதனை ஓட்டம் கடந்த ஏப்ரல் மாதமே நடைபேற்றது. கொல்கத்தாவில் உள்ள இந்த மெட்ரோ சுரங்கப்பாதைகள், லண்டன் மற்றும் பாரிஸ் இடையேயான யூரோஸ்டார் ரெயில்கள் சுரங்கப்பாதை வழியாகச் செல்வதைப் போலவே கட்டமைக்கப்பட்டுள்ளன. பார்ப்பதற்கே பிரம்மிபூட்டும் வகையில் இந்த சுரங்கப்பாதைகள் உள்ளன.

கொல்கத்தா நகரத்தின் கிழக்கு-மேற்கு பகுதியை இணைக்கும் இந்த வழித்தடம் மொத்தம் 16 கி.மீ தூரம் கொண்டது ஆகும். தண்ணீருக்கு அடியில் மட்டும் 4.8 கி.மீ சென்று, எஸ்ப்ளனடே பகுதியை ஹவுரா மைதானத்தோடு இணைக்கும் வகையில் உள்ளது. இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயங்க தொடங்கிய பிறகு ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த மாத இறுதியில் எஸ்ப்ளனடே ஹவுரா மைதான் இடையேயான வழித்தடத்தை ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் சோதனை செய்த பிறகு இந்த வழித்தடத்தில் போக்குவரத்து தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. இது குறித்து கொல்கத்தா மெட்ரோ ரயில் கார்பரேஷன் மேலாண்மை இயக்குனர் ஸ்ரீவத்ஸா கூறுகையில், " ரயில் தண்டவாளங்கள் தண்ணீருக்கு அடியில் இருப்பதால் ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் சோதனை அவசியமாகும். இருந்த போதிலும் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் மெட்ரோ சேவை தொடங்கிவிடும்" என்றார்.












Click it and Unblock the Notifications