ஷீனாவைக் கொல்ல லண்டனில் இருந்தபடி சஞ்சீவுடன் போனில் "ஸ்கெட்ச்" போட்ட இந்திராணி
மும்பை: ஷீனா போராவைக் கொலை செய்ய லண்டனில் இருந்தபடி, தனது இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னாவுடன் இந்திராணி போனில் பேசி திட்டமிட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஷீனா போரா கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான அவரது தாயார் இந்திராணி முகர்ஜி, அவரது 2வது கணவர் சஞ்சீவ் கன்னா, டிரைவர் ராய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3 திருமணங்கள் செய்த டிவி அதிபரான இந்திராணி தனது முதல் கணவர் மூலம் பிறந்த மகள் ஷீனாவைக் கொலை செய்தது ஏன் என்பது பற்றி பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்திராணியின் மூன்றாவது கணவரான பீட்டர் முகர்ஜியின் மகனான ராகுலைக் காதலித்ததால் ஷீனா கவுரக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கொலைக்கான காரணம் என்ன?
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரும் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் இப்போது இந்த கொலைக்கான காரணத்தை கண்டறிவதில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காதல் விவகாரம் ஒருபக்கம் இருந்தாலும் பணப்பிரச்சினை தொடர்பாக ஷீனா கொல்லப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது. இது தொடர்பாக இந்திராணியின் 3-வது கணவர் பீட்டர் முகர்ஜியிடம் கடந்த 2 நாட்களாக போலீசார் விசாரித்தனர்.

ஏராளமான பணம்...
டி.வி. அதிபராகவும், தொழில் அதிபராகவும் விளங்கும் பீட்டருக்கு ஏராளமான சொத்துக்கள், முதலீடுகள், வங்கி கணக்குகள் உள்ளது. அவற்றில் இருந்து அவர் தனது 2வது மனைவி இந்திராணிக்கு ஏராளமான பணம் கொடுத்துள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே இது தொடர்பான விவரங்களை அளிக்குமாறு வங்கிகளுக்கு போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

வெளிநாட்டில் சதி...
இதற்கிடையே ஷீனா கொலைக்கான சதித்திட்டம் வெளிநாட்டில் நடந்திருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி ஷீனா போரா கொலை செய்யப்பட்டார். ஆனால், அதற்கு முதல் நாள் தான் இந்திராணி லண்டனில் இருந்து மும்பை திரும்பியுள்ளார்.

செல்போன் பேச்சு...
லண்டனில் இருந்த போது இந்திராணி, தனது 2-வது கணவர் சஞ்சீவ் கன்னாவுடன் செல்போன் மூலமும், நெட் போன் மூலமும் தொடர்ந்து பலமுறை பேசியிருக்கிறார். இந்த பேச்சுக்கள் ஷீனாவைக் கொலை செய்வது தொடர்பாக இருந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ஷீனா கொலை...
லண்டனில் இருந்தபடியே கொல்கத்தாவில் இருந்து சஞ்சீவ் கன்னாவை மும்பை வரவழைத்துள்ளார் இந்திராணி. அடுத்தநாள் மும்பை திரும்பிய இந்திராணி, சஞ்சீவ் கன்னாவுடன் சேர்ந்து ஷீனாவைக் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

விசாரணை நிலவரம்...
இது தொடர்பான விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள 3 பேரின் காவல் நாளை முடிவடைகிறது. நாளை அவர்கள் மும்பை பாந்தரா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். அப்போது விசாரணை நிலவரத்தை போலீசார் கோர்ட்டில் தெரிவிக்க இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications