புதிய அரசு அமைந்ததும் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரிக்கும்: உளவுத்துறை உஷார் ரிப்போர்ட்

வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சியில்தான் சிமி, இந்தியன் முஜாகிதீன் போன்ற அமைப்புகள் தீவிரவாத அமைப்புகளாக இனம் காணப்பட்டு தடை செய்யப்பட்டன. மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்தால் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நான் பிரதமரானால் சட்டவிரோதமாக இந்தியாவில் வந்து குடியேறியுள்ள வங்கதேசத்து நாட்டவர்களை வெளியேற்றுவேன் என்று வெளிப்படையாகவே மோடி அறிவித்துள்ளார்.
பதவிக்கு வந்த உடனேயே தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக கடுமையான அதிரடி நடவடிக்கைகளை எடுக்க மோடி உத்தரவிடக்கூடும் என்று ராணுவமும், உளவுத்துறை கருதுகின்றன.
நியூயார்க் இரட்டை கோபுரம் தகர்ப்பையடுத்து ஒசாமா பின்லேடனுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான தாக்குதலை தொடங்கியதைப்போல, மும்பையில் 2008ம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கான பதிலடியை இந்தியா கொடுக்கும் என்று உளவுத்துறை கவனத்துக்கு வந்துள்ளது.
இதையெல்லாம் கருத்தில்கொண்டு தீவிரவாதிகள் இந்தியாவில் நாசவேலைகளை அதிகரிப்பார்கள் என்று உளவுத்துறை கருதுகிறது. இதற்கான பூர்வாங்க ஆதாரங்களை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள உளவுத்துறை, தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
அதில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பாக இருந்து ஜமாத்-உத்-தவா என பெயரை மாற்றிக்கொண்டு செயல்படும் தீவிரவாத அமைப்பின் மீது உளவுத்துறைக்கு மிகுந்த சந்தேகம் உள்ளது. இந்த அமைப்பின் தலைவன் ஹபீஸ் சையீதுதான் மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்டவன் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications