யோகா ஒற்றுமையை நோக்கி மக்களை வழிநடத்துக்கிறது - பிரதமர் மோடி பெருமிதம்
விசாகப்பட்டினம்: ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்துக்கான யோகா என்ற கருப்பொருளில் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டிணத்தில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழச்சியில், உலகம் முழுவதையும் யோகா இணைத்துள்ளது. ஒற்றுமையை நோக்கி உலகத்துடன் மக்களை யோகா வழிநடத்துக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டில் ஐநா சபையில் பேசிய பிரதமா் மோடி, யோகாவின் பெருமைகளையும், அதனால் கிடைக்கும் நன்மைகளையும் எடுத்துக் கூறி, இதனை சர்வதேச யோகா தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என பரிந்துரை செய்தார். இதற்கு 177 உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து, ஜூன் 21 ஆம் தேதியை சா்வதேச யோகா தினமாக ஐ.நா. அறிவித்தது. 2015 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோா் ஆண்டும் சா்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 2015 ஆம் ஆண்டு முதல் யோக தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு சர்வதேச 11 ஆவது யோகா தினம், 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்துக்கான யோகா' என்ற கருப்பொருளுடன் இன்று கொண்டாடப்படுகிறது. இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலும் யோகா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள ஆா்.கே. கடற்கரையில் இருந்து போகாபுரம் வரை 26 கி.மீ. தொலைவிலான சாலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 3.19 லட்சம் போ் கலந்துகொண்டு யோக பயிற்சிகளை மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: 11 ஆவது சர்வதேச யோகா தினத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். உலகம் முழுவதையும் யோகா இணைத்துள்ளது. ஜூன் 21 ஆம் தேதியை ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச யோகா நாளாக கொண்டாட இந்தியா முன்மொழிந்தது. அதனை குறைந்த காலத்திலேயே 175 நாடுகளும் ஏற்றுக் கொண்டன.
உலகம் முழுவதும் சில பதற்றங்கள் மற்றும் அமைதியற்ற நிலை அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சமயங்களில் யோகா அமைதிக்கான வழியை நமக்குத் தரும். மனதை ஆசுவாசப்படுத்தவும், சமாதானப்படுத்தவும் உதவும்.
மாற்றுத் திறனாளிகள் பிரெய்லி உதவியுடன் யோக சாஸ்திரங்களை படிக்கின்றனர். மிகவும் பெருமையாக உள்ளது. உலகம் முழுவதையும் யோகா ஒன்றிணைத்து ஒற்றுமையை நோக்கி நம்மை வழிநடத்துகிறது. யோகா என்பது நாகரீகம், பின்னணி, எல்லை, வயதிற்கு அப்பாற்பட்டது. அனைவருக்கும் யோகா ஏற்றதாகும். நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் அடைவதற்கு யோகா ஒரு நாகரீகமாகும்.
தனிப்பட்ட ஒழுக்கம், நான் என்பதில் இருந்து நாம் என்று அழைத்துச் செல்லும் ஒரு அமைப்பு யோகா. மனிதகுலம் முழுமையடைய சுவாசிக்க, சமநிலைப்படுத்த தேவையான ஒரு பட்டன் தான் யோகா என்றார்.












Click it and Unblock the Notifications