''அப்டீன்னா யுவர் ஆனர்.. கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா, இல்லையா...?''
டெல்லி: கஜுரஹோவில் உள்ள சிற்பங்கள் ஆபாசமானதா இல்லையா என்று உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளனர் இன்டர்நெட் சர்வீஸ் புரொவைடர் எனப்படும் இணையதள சேவையை வழங்குவோர்.
எது ஆபாசம், எது ஆபாசம் இல்லை என்பதையும் உச்சநீதிமன்றமே வரையறுத்துச் சொன்னால் நலமாக இருக்கும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கஜுரஹோ சிற்பங்களை நாம் ஆபாசமானவை என்று சொல்ல முடியுமா என்றும் இவர்கள் வினவியுள்ளனர்.
ஆபாச இணையதளங்களை மூட வேண்டும் என்று கோரி ஒரு பொது நலன் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இன்டர்நெட் சேவையாளர்கள் சங்கம் சார்பில் ஒரு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்தான் இப்படிக் கேட்டுள்ளனர் அவர்கள்.
முன்னதாக ஆபாச இணையதளங்களுக்குத் தடை கோரி இந்தூரைச் சேர்ந்த கமலேஷ் வஸ்வானி என்பவர் தாக்கல் செய்த மனுவில், சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரிக்க ஆபாச இணையதளங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே இவற்றைத் தடை செய்து மூட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதற்கு இணையதள சேவையாளர்கள் சங்கம் தாக்கல் செய்த பதில் மனுவில், ஆபாசம் என்பதற்கு என்ன வரையறை உள்ளது. அந்த வார்த்தையை எதற்குப் பயன்படுத்தலாம்... ஆபாசம் என்பதற்கு இதுவரை எல்லைக் கோடு எதையும் யாருமே கிழித்து வைக்கவில்லை.
ஆபாசம் என்றால், மருத்துவ அல்லது எய்ட்ஸ் விழிப்புணர்வு இணையதளங்களை ஆபாசம் என்று கூற முடியுமா?
கஜுரஹோ சிற்பங்களை ஆபாசம் என்று கூற முடியுமா? அவற்றைப் படம் எடுத்துப் போட்டால் அது ஆபாசமாகுமா? ஒருவருக்கு ஆபாசமாகத் தெரிவது, இன்னொருவருக்குக் கலையாக தெரிகிறது. எனவே எது ஆபாசம் என்பதற்கு வரையறையை கோர்ட்டே வகுக்க வேண்டும்.
கோர்ட் அல்லது அரசு உத்தரவில்லாமல் எந்த இணையதளத்தையும் எங்களால் தடுக்க முடியாது. மேலும் எந்தவிதமான ஆபாசத்தையும், அப்படிக் கூறப்படுவபற்றையும் இணையதள சேவையாளர்கள் செய்வதில்லை. நாங்கள் எந்த இணையதளத்திலும் திருத்தம் செய்வதில்லை, அதை மாற்றுவதில்லை. வாடிக்கையாளர்களுக்கு அக்சஸ் கொடுப்பது மட்டுமே எங்களது வேலை.
எனவே இணையதளங்களில் இடம் பெறும் தகவல்களுக்கு நாங்கள் பொறுப்பாக முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்னும் 3 வாரங்களுக்குள் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகத்திற்கு நீதிபதி பி.எஸ்.செளகான் தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.












Click it and Unblock the Notifications