"பெட்டிங்கை" வேடிக்கை பார்ப்பதா? ஐ.பி.எல். சி.இ.ஓ. சுந்தர்ராமனுக்கு "செம டோஸ்" விட்ட உச்சநீதிமன்றம்!
டெல்லி: ஐ.பி.எல். போட்டிகளில் பெட்டிங் நடைபெறுகிறது என்று தெரிந்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதா? என்று ஐ.பி.எல். சி.இ.ஓ. சுந்தரராமனை மிகக் கடுமையாக உச்சநீதிமன்றம் விமர்சித்தது.
ஐ.பி.எல். போட்டிகளின் பிக்ஸிங் மற்றும் பெட்டிங் தொடர்பாக விசாரணை நடத்திய முட்கல் கமிட்டி அறிக்கை மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு பிரிவைச் சேர்ந்த ஒய்.பி.சிங், சில அணி உரிமையாளர்கள் பெட்டிங்கில் ஈடுபடுவதாக வதந்தி பரப்பப்படுகிறது என்று ஐ.பி.எல். சி.இ.ஓ. சுந்தர் ராமன் தரப்பில் கூறப்பட்டது.
இதில் கடும் அதிருப்தி அடைந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தைச் சேர்ந்த சிலர் பெட்டிங் ஈடுபடுவதாக புகார் வந்தும் நீங்கள் அதை கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு மற்றவர்கள் மீது குறை கூற வேண்டாம்.. பெட்டிங் போன்ற நடவடிக்கைகளில் பிசிசிஐ தலைவராக இருந்தவரின் மருமகன் ஈடுபடுகிறார் என்ற தகவல் கிடைத்த போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? ஒன்றுமே செய்யாமல் அமைதியாகத்தான் இருந்தீர்கள்.. என்றனர்.
மேலும் மெய்யப்பனும் குந்த்ராவும் பெட்டிங்கில் ஈடுபடுகிறார்கள் என்ற தகவல் கிடைத்த போது அந்த தகவலின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டமா? இல்லையா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சுந்தர் ராமன் தரப்பு வழக்கறிஞர், அப்படி எந்த ஒரு உறுதியான தகவலும் கிடைக்கவில்லை என்றார்.
இந்த வழக்கின் விசாரணை இன்றும் நடைபெற உள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பீகார் கிரிக்கெட் சங்கத்தின் செயலர் ஆதித்ய வர்மா, முட்கல் கமிட்டியிடம் சுந்தர் ராமன் தெரிவித்தது வேறு.. தற்போது உச்சநீதிமன்றத்தில் அவர் கூறி வருவது வேறு... இரண்டும் முரண்பாடாக இருக்கிறது. உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தை கவனத்தில் கொண்டுள்ளது. சீனிவாசன் மீது புகார்கள் நிலுவையில் இருக்கும் போது அவர் தொடர்ந்தும் பதவியில் இருக்கக் கூடாது என்பதற்கான ஆவணங்களைக் கொடுத்துள்ளோம். அதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளும் என்றார்.