4 கிரிக்கெட் சங்கங்களுக்கு முறைகேடான வரிவிலக்கால் ரூ.37 கோடி வரி இழப்பு

தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை, நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், வருமான வரித்துறை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
வருமான வரிச்சட்டத்தின் 2(15)-வது பிரிவு, வர்த்தக நோக்கத்தில் செய்யப்படும் காரியங்களை தொண்டாக கருதக்கூடாது என்று கூறுகிறது. ஆனால் அதை மீறி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்த 4 கிரிக்கெட் சங்கங்களுக்கு வருமான வரித்துறை, வழக்கத்துக்கு மாறான வரிவிலக்கு அளித்துள்ளது.
சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கம், பரோடா கிரிக்கெட் சங்கம், கேரளா கிரிக்கெட் சங்கம், மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் ஆகியவை டெலிவிஷன் ஒளிபரப்பு உரிமம் மூலம் ஈட்டிய வருவாய்க்கு வருமான வரித்துறை வழக்கத்துக்கு மாறாக வரிவிலக்கு அளித்துள்ளது. இதன்மூலம், ரூ.37 கோடியே 23 லட்சம் வரி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த 4 சங்கங்களில் சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கம், டெலிவிஷன் ஒளிபரப்பு உரிமம் மூலம், கடந்த 3 ஆண்டுகளில் ரூ.35 கோடி வருவாய் ஈட்டி உள்ளது. ஆனால் கிரிக்கெட் மேம்பாட்டுக்கு சிறிதளவு தொகையே செலவிட்டுள்ளது. இதன்மூலம், ரூ.8 கோடியே 45 லட்சம் வரி இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், சிறப்பு உத்தரவு ஏதும் இல்லாதபட்சத்தில், நன்கொடை மூலம் கிடைத்த வருவாயை வருமானமாகவே கருத வேண்டும். ஆனால், 30 அறக்கட்டளைகளுக்கு அப்படி கிடைத்த நன்கொடையை வருமானமாக கருதாமல், தொகுப்பு நிதியத்தில் சேர்க்க வருமான வரித்துறை அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். இதனால், ரூ.59 கோடியே 61 லட்சம் வரி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications