பாபர் மசூதியை இடித்ததற்காக அத்வானிக்கு பத்மவிபூஷண் விருதா?... லாலு கேள்வி!
பாட்னா: அயோத்தியில் பாபர் மசூதியை இடித்ததற்காக அத்வானிக்கு பத்மவிபூஷண் விருது தரப்பட்டுள்ளதா.. அவருக்கு என்ன தகுதியின் கீழ் இந்த விருதை மத்திய அரசு கொடுத்துள்ளது என்பதை விளக்க வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாட்னாவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அத்வானிக்கு என்ன தகுதியின் அடிப்படையில் பத்மவிபூஷண் விருது கொடுத்துள்ளனர் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவரது தலைமையில்தான் பாஜக ரத யாத்திரை நடத்தியது. பாபர் மசூதியை இடித்தார்கள். அதற்காக இந்த விருதா என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்.
பாஜகவை அமெரிக்க அதிபர் ஒபாமா மிகச் சரியாக புரிந்து கொண்டிருக்கிறார். பாஜகவின் முகம் அவருக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. இதனால்தான் மத நல்லிணக்கம் குறித்து அவர் பேசியிருக்கிறார். மதத்தால் பிரச்சினை செய்யக் கூடாது என்பதை அவர் மறைமுகமாக தனது பேச்சில் குறிப்பிட்டிருக்கிறார். இது பாஜகவின் முகத்தில் விழுந்த அடியாகும்.
குடியரசு தின விழாவில் வெளிநாட்டுத் தலைவர் கலந்து கொண்டது தவறில்லை. ஆனால் அதை அரசியல் லாபத்துக்காக பயன்படுத்தக் கூடாது பாஜக. அணு சக்தி ஒப்பந்தமானது கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது கொண்டு வரப்பட்டது. அதற்குக் காரணம் பாஜக அல்ல என்றார் லாலு.