சுத்திக்கிட்டே இருக்கும் அரியணை.. ஜெயலலிதாபோல் ராஜஸ்தானில் நிறுத்துமா காங்கிரஸ்! அதென்ன ஃபார்முலா?
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், அம்மாநிலத்தின் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆட்சி மாற்றத்தை இம்முறை தடுத்து நிறுத்துமா காங்கிரஸ் கட்சி? விரிவாக பார்ப்போம்.
200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அசோக் கெலாட்டை முதலமைச்சராக அறிவித்தது காங்கிரஸ் தலைமை. சச்சின் பைலட் உடனான மோதல் போக்கு, காங்கிரஸ் தேசிய தலைவர் தேர்தல் போன்ற பல்வேறு இடற்பாடுகளுக்கு மத்தியில் முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்காமல் 5 ஆண்டுகள் போராடி தக்க வைத்து ஆட்சியை தக்க வைத்து உள்ளார்.

அவரது ஆட்சிக் காலம் இந்த ஆண்டு இறுதியுடன் நிறைவடையும் நிலையில் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் டிசம்பர் 3 ஆம் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. வட மாநிலங்களில் மிகப்பெரிய நிலப்பரப்பையும், வரலாற்று ரீதியாக மிகப்பெரிய ராஜாங்கங்களை கொண்ட ராஜஸ்தானில் காங்கிரஸும் பாஜகவும் எப்போதுமே சமபலத்தில் இருக்கும் கட்சிகள்.
இந்த தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை கைப்பற்றியே தீர வேண்டும் என்ற நோக்கில் பாஜகவும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்கள். அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். பாஜகவுக்காக பிரதமர் மோடி, அமித்ஷா, ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்கள், பல மாநில முதலமைச்சர்கள் பிரச்சாரத்தில் குதித்தனர்.
தீவிர தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்து கடந்த 25 ஆம் தேதி ஒரு கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. கடந்த தேர்தலை 0.73 சதவீதம் விட அதிகமாக 75.45 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தை பொறுத்தவை ஆட்சிக்கட்டில் என்பது சுழன்றுகொண்டே இருக்கக்கூடியது. தமிழ்நாட்டில் ஒரு முறை திமுகவும், அடுத்த முறை அதிமுகவும் மாறி மாறி ஆட்சியில் அமர்ந்து வந்தன. ஆனால், அந்த சுழற்சியை 2016 ஆம் ஆண்டு தேர்தலில் நிறுத்தி தொடர்ந்து 2 முறையில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா.
இதேபோன்றுதான் ராஜஸ்தானிலும் பாஜகவும், காங்கிரஸும் ஆட்சிக் கட்டிலில் மாறி மாறி அமர்ந்துகொண்டு இருக்கின்றன. கடந்த 2018 ஆம் ஆண்டு வீசிய மோடி அலையிலும் இந்த கட்டிலின் சுழற்சி நிற்கவே இல்லை. இந்த நிலையில் இந்த ஃபார்முலா அடிப்படையிலும், வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்பு, மற்றும் சில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் தங்களுக்கே இம்முறை வெற்றி என்று பாஜக நம்புகிறது.
அதே சமயம் புதிய தேசிய தலைவர், இந்தியா கூட்டணி, கர்நாடகா, இமாச்சல பிரதேசம் கொடுத்த ஊக்க என நம்பிக்கையுடன் இந்த தேர்தலை காங்கிரஸ் எதிர்கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் ஜெயலலிதா செய்ததை ராஜஸ்தானில் காங்கிரஸ் செய்யுமா என்று பொறுத்திருந்து பார்த்தோம்.












Click it and Unblock the Notifications