ஜார்க்கண்ட் பெண் ஆளுநரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்த மோடி திட்டம்?
டெல்லி: ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்தவரும், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவரும், ஜார்க்கண்ட் மாநில ஆளுநருமான திரவுபதி மர்முவை குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்த பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
59 வயதாகும் மர்முவை மோடி வேட்பாளராக்க சில காரணங்கள் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதாவது பாஜகவிடம் உள்ள வாக்குப் பற்றாக்குறையை சரி கட்டுவதே இந்தத் தேர்வின் முக்கிய நோக்கமாக கூறப்படுகிறது.

மர்முவை வேட்பாளராக்குவதன் மூலம் ஒடிஷா மாநிலத்தில் உள்ள வாக்குகளை மொத்தமாக அள்ளி விடலாம் என்பதே மோடியின் கணக்கு என்கிறார்கள். இதனால் பாஜக வேட்பாளர் நிற்கவும் வாய்ப்புள்ளது, பழங்குடியினர் சமூகத்தின் அன்பையும் பெற முடியும் என்பது போனஸ் கணக்கு என்கிறார்கள்.
தற்போது திரவுபதி மர்முவின் பெயர் தீவிரப் பரிசீலனையில் உள்ளதாக பாஜக தரப்பிலிருந்து ஒன்இந்தியாவுக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரவுபதி தற்போது ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருக்கிறார். 20 வருட காலம் அரசியலில் இருந்தவர் இவர் 1997ம் ஆணடு இவர் முதலில் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் ஒடிஷா சட்டசபைக்குத் தேர்வானார். சிறந்த எம்.எல்.ஏ என்ற பெயரை வாங்கியவர் மர்மு.
சமூக, பொருளாதார பிரச்சினைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தவர். பழங்குடியினர் முன்னேற்றத்துக்காக தீவிரமாக பாடுபட்டவர். எந்தவிதமான சர்ச்சையிலும் சிக்காதவரும் கூட. இதனால்தான் இவரை பாஜக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற மொத்தம் 5 லட்சத்து 49 ஆயிரத்து 442 வாக்குகள் தேவை. தற்போது பாஜகவிடம் மொத்தமாக 5,31,954 லட்சம் வாக்குகள் உள்ளன (கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்து). ஒடிஷாவில் ஆளும் கட்சியாக உள்ள பிஜூ ஜனதாதளத்திடம் 17,433 எம்.எல்.ஏ வாக்குகளும், 19,824 எம்.பி வாக்குகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications