கடத்தப்பட்ட 39 இந்தியத் தொழிலாளர்கள்.. விடுவிக்க ஐஎஸ்ஐஎஸ்மறுப்பு.. தொடர்பும் துண்டிப்பு!
டெல்லி: ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் 39 இந்தியத் தொழிலாளர்கள் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க முடியாது என்று தீவிரவாதிகள் மறுத்து விட்டதாலும், தகவல் தொடர்பு தற்போது துண்டிக்கப்பட்டிருப்பதாலும், இந்தியத் தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த 39 பேரும் கட்டுமானத் தொழிலாளர்கள் ஆவர். மொசூல் நகரிலிருந்து கடத்தப்பட்டுள்ளனர். ஜூன் 15ம் தேதி இவர்களை கடத்திச் சென்றனர் தீவிரவாதிகள். அதாவது இந்திய நர்சுகள் கடத்தப்படுவதற்கு முன்பே கடத்தப்பட்டவர்கள் இவர்கள்.
தற்போது இவர்களை பாதுகாப்புக் கேடயம் போல தீவிரவாதிகள் பயன்படுத்தத் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. அதாவது ஈராக் படைகளோ அல்லது அமெரிக்க படையோ தாக்குதல் நடத்தினால் இவர்களை முன்னிறுத்தி தாங்கள் தப்பிக்க முயல்வதாக கூறப்படுகிறது. இதனால் இந்தத் தொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், தீவிரவாதிகளுடன் எங்களால் முடிந்தவரை அனைத்து வழிகளிலும் பேசி வருகிறோம். ஆனால் அவர்கள் கடத்தப்பட்டவர்களை விடுவிக்க மறுத்து வருகின்றனர். தொடர்ந்து பேச்சு நடத்தப்படும். அதுவரை அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தற்போது தீவிரவாதிகளுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதாக ஒரு தகவல் கூறுகிறது.
மொத்தம் 40 பேர் கடத்தப்பட்ட நிலையில் ஒருவர் மட்டும் தீவிரவாதிகளின் பிடியிலிருந்து தப்பி வந்தது நினைவிருக்கலாம். மற்ற 39 பேரும் தொடர்ந்து தீவிரவாதிகளின் பிடியில்தான் உள்ளனர்.












Click it and Unblock the Notifications