ஐஎஸ்ஐஎஸ்ஸின் முதல் இந்திய "தற்கொலைப் படை தீவிரவாதி"... மகாராஷ்டிர என்ஜீனியருக்குக் கிடைத்த "பெருமை"!
டெல்லி: மகாராஷ்டிராவைச் சேர்ந்த 23 வயதேயான ஆரிப் பயஸ் மஜீத் என்ற சிவில் என்ஜீனியருக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் முதல் இந்தியத் தற்கொலைப்படைத் தீவிரவா்தி என்ற பெருமை கிடைத்துள்ளது. 3 முறை இவர் தற்கொலைப் படைத் தாக்குதலிலும் ஈடுபட்டார். ஆனால் குண்டு வெடிக்கவில்லை, அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இவரும் கூட கடைசி நேரத்தில் மனம் மாறி தாயகம் திரும்பி விட்டார்.
ஆரிப் சிவில் என்ஜீனியர் ஆவார். மகாராஷ்டிர மாநிலம் பான்வெல் பகுதியைச் சேர்ந்தவர். 23 வயதேயான இளைஞர் மூளைச் சலவை பெற்று ஐஎஸ்ஐஸ் அமைப்பில் இணைந்தார். சிரியாவுக்குச் சென்ற அவர் அங்கு அந்த நாட்டுப் பெண் ஒருவரையும் மணந்து கொண்டார்.
இவரை தற்கொலைப் படையில் சேர்த்த ஐஎஸ் தீவிரவாதிகள் அவருக்குப் பயிற்சியும் அளித்து ஈரானின் மொசூல் நகருக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஈராக் மற்றும் குர்திஷ் படையினருக்கு எதிராக தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த இவர் பணிக்கப்பட்டார்.
3 முயற்சிகள்
தற்கொலைப் படை வீரராக இவருக்கு முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. அடுத்தடுத்து 3 முறை முயற்சித்தும் அவை தோல்வியிலேயே முடிந்தன.
முதல் முயற்சி
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் முதல் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது கூட்டு படையினர் நடத்திய விமானத் தாக்குதலால் இவரது தாக்குதல் முயற்சி தோல்வியில் முடிந்தது.
ராணுவ நிலையைத் தாக்க முயன்றார்
இவர் ஒரு வாகனம் நிறைய வெடிகுண்டுகளை நிரப்பி அதைக் கொண்டு ராணுவ நிலையைத் தாக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அது நடைபெறாமல் போய் விட்டது.
செப்டம்பரில் ரபியா நகரில்
அடுத்து செப்டம்பர் மாதம் இவர் ரபியா நகரில் குர்திஷ் ராணுவு நிலை மீது இதேபோல வாகனத்தில் குண்டுகளை நிரப்பி தாக்க முயன்றார். ஆனால் குர்திஷ் படையினர் இந்த வாகனத்தைத் தாக்கி அழித்து விட்டனர்.
குண்டுக் காயம் பட்டார்
அப்போது ஆரிப்பையும் குர்திஷ் படையினர் சரமாரியாக சுட்டதில் அவர் காயமடைந்தார். அவரை சக ஐஎஸ்ஐஸ் தீவிரவாதிகள் மீட்டுக் காப்பாற்றியதால் உயிர் பிழைத்தார்.
ஈராக்கில் 3வது தாக்குதல் முயற்சி
அடுத்து ஈராக்கின் தலால் ஹுவா என்ற நகரில் மூன்றாவது முயற்சியில் ஈடுபட்டார். அப்போது குர்திஷ் படையினரை நோக்கி ஹம்மர் காரில் வெடிகுண்டுகளைக் கொண்டு இவர் நகர்ந்தபோது அதை துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டது குர்திஷ் படை. இதில் கார் சேதமடைந்தது. ஆரிப்பும் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தார்.
நீ லாயக்கில்லை
அடுத்தடுத்து இப்படி 3 முறையும் தாக்குதல் முயற்சியில் அவர் தோல்வி அடைந்ததால் இவர் இடம் பெற்றிருந்த பிரிவின் தலைவரான அபு சாதிக் என்பவர், நீ சரிப்பட்டு வர மாட்டாய், விலகி விடு என்று கூறியுள்ளார். ஆனால் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் ஆர்வத்தில் இருந்தாராம் ஆரிப்.
'தியாகி'யாக முடியவில்லை
இதுகுறித்து விசாரணை அதிகாரிகளிடம் ஆரிப் கூறுகையில், ஒரு தியாகியாக நான் மரணிக்க விரும்பினேன். ஆனால் அது முடியாமல் போய் வி்ட்டது என்றார். இதையடுத்து இவர் ரக்கா நகரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏராளமான பதுங்கு குழிகளை ஏற்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.
மும்பை திரும்பினார்
இந்த நிலையில் அவரது மனதில் மாற்றம் ஏற்படவே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியா திரும்பி விட்டார். மே 24ம் தேதி அவர் மும்பையிலிருந்து தனது நண்பர்களுடன் சிரியாவுக்குக் கிளம்பிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு திரும்பியது முதல் அவர் சிறைக் காவலில் இருந்து வருகிறார்.
சிரிய பெண்ணுடன் திருமணம்
ஆரிப் சிரியா சென்றதும் அந்த நாட்டுப் பெண்ணை மணந்துள்ளார். ஆனால் தீவிரவாதிகள் பெண்களை பாலியல் ரீதியாக மிகத் தவறாக், மோசமாக பயன்படுத்தி வருவதாக கூறுகிறார் ஆரிப். பிடிக்கப்படும் பெண்களை அவர்கள் செக்ஸ் அடிமைகளாகவே நடத்துவதாகவும் கூறியுள்ளார் ஆரிப்.