தனிமைப்பட்டது பாகிஸ்தான்.. இந்தியா உட்பட 4 நாடுகள் புறக்கணிப்பால் சார்க் மாநாடு ரத்து!
டெல்லி: பாகிஸ்தானில் நவம்பர் மாதம் நடைபெறவிருந்த சார்க் மாநாட்டை இந்தியா உள்பட 4 நாடுகள் புறக்கணித்ததால் சார்க் மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் மாதம் 9, 10 ஆகிய தேதிகளில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 19வது சார்க் மாநாடு நடைபெறுவதாக இருந்தது. இதில் சார்க் நாடுகளின் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட இருந்தது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்திலுள்ள யூரி தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து பாகிஸ்தானில் நடைபெற இருந்த சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணித்தது. இதற்கு ஆதரவாக வங்கதேசம், பூடான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் மாநாட்டை புறக்கணித்தன.
இதனையடுத்து, 4 நாடுகள் சார்க் மாநாட்டை புறக்கணித்ததால் சார்க் மாநாடு மொத்தமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்தியமைக்கப்பட்ட விதிமுறைப்படி, சார்க் மாநாடு நடைபெற வேண்டுமானால் அனைத்து உறுப்பு நாடுகளும் அதில் பங்கேற்பது கட்டாயம். இந்தியாவின் பின்னால் பல நாடுகளும் அணி வகுத்து நிற்பது, பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்திய அரசு எடுத்துக்கொண்ட முயற்சியின் முதல் வெற்றி.