சந்திரயானை விடுங்க.. அடுத்த டார்கெட் சூரியன்! மிரட்டும் ஆதித்யா L1.. ஸ்பேஸ் ரேஸில் முந்தும் இஸ்ரோ
ஸ்ரீஹரிகோட்டா: சமீபத்தில் நிலவை ஆய்வு செய்ய சந்திரயான்-3 விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பி உலக நாடுகளின் கவனத்தை இஸ்ரோ ஈர்த்திருந்த நிலையில், தற்போது சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா L1 எனும் விண்கலத்தை விண்வெளிக்கு விரைவில் அனுப்ப இருக்கிறது.
இன்னும் சில நூறு ஆண்டுகளில் பூமி மீது விண்கற்களின் மோதல்கள் அதிகரிக்கலாம் என விஞ்ஞானிகள் கணித்திருக்கின்றனர். இது ஒரு சில ஆயிரம் ஆண்டுகளில் பூமியையே அழிக்கும் அளவுக்கு அதிகரிக்கும். இதிலிருந்து தப்பிக்க ஒரேயொரு வழி மட்டுமே இருக்கிறது. அதாவது வேற்று கிரகத்தை கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு பூமியிலிருந்து பயணிப்பதைவிட நிலவிலிருந்து பயணிப்பதுதான் சுலபம். நிலவின் தென் துருவ பகுதியில் நீர் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நீரிலிருந்து ஹைட்ரஜனை தனியாக எடுத்து எரிவாயுவாக பயன்படுத்தி அங்கிருந்து வேறு கிரகங்களுக்கு செல்லலாம். எனவே நிலவை ஆக்கிரமிக்க
உலக நாடுகள் மீண்டும் போட்டிப்போட தொடங்கியுள்ளன. இந்நிலையில்தான் இந்தியா சந்திரயான்-3 விண்கலத்தை ஏவியது. இது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதேபோல நிலவு மட்டுமல்லாது சூரியனை ஆய்வு செய்யவும் இஸ்ரோ விரைவில் ஆதித்யா L1 எனும் புதிய விண்கலத்தை அனுப்ப இருக்கிறது.
சூரியனிலிருந்து வெளிவரும் காந்த புயல் பூமியில் இருக்கும் அனைத்து மின்னணு சாதனங்களையும் செயலிழக்க வைத்துவிடும். இன்றைய தேதியில் நூற்றுக்கணக்கான அணு உலைகளை பாதுகாக்க மின்னணு சாதனங்கள்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி இருக்கையில் காந்த புயல் காரணமாக இது பாதிக்கப்பட்டால் பேரழிவு ஏற்படும். எனவே காந்த புயல்களை முன்கூட்டியே கணிக்கவும், சூரியனின் பல்வேறு அடுக்குகளை ஆய்வு செய்யவும் இந்த ஆதித்யா L1 எனும் புதிய விண்கலம் அனுப்பப்பட இருக்கிறது.
இந்தியா சார்பில் முதன் முதலில் சூரியனை கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் அனுப்பப்படும் முதல் விண்கலம் இதுதான். எனவே உலக நாடுகள் இதை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இது இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ கூறியுள்ளது. இது குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில்,
"ஆதித்யா L1 எனும் புதிய விண்கலம் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவற்றை குறித்து ஆய்வு செய்யும். பூமியிலிருந்து சுமார் 10.5 லட்சம் கி.மீ தொலைவில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்படுகிறது. இது சூரியனை நோக்கிய கோணத்தில் வைக்கப்படும். தொடர்ந்து சூரியனில் நடக்கும் மாற்றங்களை ஆய்வு செய்வதுதான் இதன் பணி" என்று கூறியுள்ளார்.
பெங்களூரு யுஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் தயாரிக்கப்பட்டு வந்த இந்த செயற்கைக்கோள் தற்போது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள எஸ்டிஎஸ்சி-ஷார் விண்வெளி நிலையத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது. சூரியன் குறித்த ஆய்வையும் ஒரு சில உலக நாடுகள்தான் மேற்கொண்டு வருகின்றன. இனி எதிர்காலமே சூரிய ஒளியாக கூட இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறி வரும் நிலையில் இஸ்ரோவின் இந்த ஆதித்யா L1 விண்கலம் குறித்த எதிர்பார்ப்பு தீவிரமடைந்து வருகிறது.












Click it and Unblock the Notifications