ராம மோகன ராவ் சம்பந்தி வீட்டில் ஒரு பக்கம் ஐடி ரெய்டு... மறு பக்கம் பிறந்தநாள் கொண்டாட்டம்
ராம மோகன் ராவ் சம்பந்தி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய போது பிறந்தநாள் கொண்டாட்டமும் நடைபெற்றது தகவல் தெரியவந்துள்ளது.
சித்தூர்: தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதேபோல், அவரது சம்பந்தியான சித்தூரில் வசித்துவரும் பத்ரிநாராயணன், வீட்டிலும் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனை புதன்கிழமை அதிகாலையில் இருந்து 25 மணி நேரம் நடைபெற்றது. வருமான வரித்துறையினர் சோதனை நடத்த வந்த போது முதலில் அதிர்ச்சி அடைந்த பத்ரிநாராயணன் பின்னர் அதிகாரிகள் சோதனை நடத்த முழு ஒத்துழைப்பு அளித்தாராம்.

பத்ரிநாராயணன் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்துகிறார்கள் என்ற தகவலை கேள்விப்பட்டு பாதுகாப்புக்காக சித்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். எனினும் அவர்களை வருமான வரி அதிகாரிகள் உள்ளே வரவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதால் அவர்கள் திரும்பிச் சென்றனர்.
பத்ரிநாராயணனுக்கு ரெய்டு நடந்த டிசம்பர் 21ம் தேதி பிறந்த நாளாகும். அவரது குடும்பத்தினர் பிறந்தநாள் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்த வந்தபோது முதலில் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அதிகாரிகள் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோதே வீட்டு வாசலில் பத்ரிநாராயணன் தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினாராம்.
அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறவந்த தெலுங்கு தேசம் கட்சியினரும், நண்பர்களும் வீட்டில் வருமான வரி சோதனை நடப்பதை அறிந்ததும், வாசலில் நின்றபடி வாழ்த்து கூறிவிட்டு சென்றனர்.
சோதனையின்போது ரூ.25 லட்சம் ரொக்கம், 2 கிலோ தங்கம் மற்றும் 125 ஏக்கர் நிலம் வாங்கியதற்கான பத்திரம் ஆகியவற்றை வருமான வரி அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. பத்ரிநாராயணன் வீட்டில் கைப்பற்றப்பட்ட நகை, பணம் தொடர்பாக, அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications