மம்தா பானர்ஜிக்கு அன்னா ஹசாரே ஆதரவு தருவது ‘எனது துரதிருஷ்டம்’: கெஜ்ரிவால்
டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு , சமூக சேவகர் அன்னா ஹசாரே ஆதரவு அளித்தது தனது துரதிருஷ்டம் என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
ஊழலுக்கு எதிராக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் போராட்டங்களில் இணைந்து செயல்பட்டு வந்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். ஆனால், அன்னாவின் அறிவுரையை மீறி அரசியல் கட்சி ஆரம்பித்தார் கெஜ்ரிவால். இதனால் ஹசாரே - கெஜ்ரிவால் உறவில் விரிசல் ஏற்பட்டது.

சமீபத்தில் நடந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆதரவோடு டெல்லி முதல்வரானார் கெஜ்ரிவால். கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் டெல்லி முதல்வராக செயல்பட்ட கெஜ்ரிவால், ஜன்லோக்பால் மசோதாவிற்காக தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதற்கிடையே, சமீபத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியைப் பாராட்டி பேசியிருந்தார் அன்னா ஹசாரே. இது குறித்து கெஜ்ரிவாலிடம் தனியார் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் கூறியதாவது:-
"அன்னா ஹாசாரே எங்களை விரும்பாமல் மம்தா பானர்ஜிக்கு ஆதரவு அளித்ததில் எனக்கு துரோகம் இழைக்கப்பட்டதாக நான் கருதவில்லை. இது எனது துரதிருஷ்டம் என்றே கருதுகிறேன்.
சில வேறுபாடுகள் இருந்தாலும் நாங்கள் அன்னா ஹசாரேவை மிகவும் மதிக்கிறோம்.அன்னா ஹசாரே எதை கூறினாலும் அது எங்களுக்கு மிக முக்கியமான ஒன்று", என இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications