ஜம்மு காஷ்மீர் -ஜார்க்கண்ட்... இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு.. பெரும் எதிர்பார்ப்பில் பாஜக
ஸ்ரீநகர்/ராஞ்சி: ஜம்மு காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த இரு மாநிலங்களையும் கைப்பற்றும் நோக்கில் பாஜகவினர் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இரு மாநிலங்களிலும் ஐந்து கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 87 தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீரில் 15 தொகுதிகளுக்கும், 81 சட்டசபைத் தொகுதிகளுடன் கூடிய ஜார்க்கண்ட் மாநிலத்தில் 13 தொகுதிகளுக்கும் இன்று முதல் கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

ஜம்மு காஷ்மீரில் ஆளும் கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ், பாஜக, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை கடும் போட்டியில் உள்ளன. இங்கு ஜம்மு பிராந்தியத்தில் பாஜக பெரும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் அக்கட்சி கணிசமான வெற்றியை எதிர்நோக்கியுள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில் ஜம்மு காஷ்மீரில் உள்ள 6 தொகுதிகளையும், மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் பாஜக ஆகியவை கைப்பற்றின என்பது நினைவிருக்கலாம். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 50 தொகுதிகளுக்கு பாஜக குறி வைத்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள 13 தொகுதிகளில் இன்று மிக பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவ நடைபெறுகிறது. இங்கு ஆளும் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிகளுக்கு இடையே கடும் மோதல் நிலவுகிறது.
ஜம்மு காஷ்மீரில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் பகுதிகள் - லடாக்கில் 4, செனாப் பள்ளத்தாக்கில் 6, பந்திப்பூர் மற்றும் கந்தெர்பாலில் மொத்தமாக 5 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications