விமான நிலையத்தில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கத்தி குத்து.. வழிந்த ரத்தம்.. விசாகபட்டிணத்தில் பரபரப்பு
Recommended Video
விசாகபட்டிணம்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் வைத்து கத்திக்குத்துக்கு உள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெகன்மோகன் ரெட்டி விசாகப்பட்டினத்தில் இருந்து ஹைதராபாத் செல்வதற்காக இன்று மதியம் விமான நிலையத்தின் விஐபிகளுக்கான பகுதிக்கு வந்தார்.
அப்போது ஒரு வாலிபர் அவரருகே வந்து, செல்போனில் செல்பி புகைப்படம் எடுப்பது போல நடித்து திடீரென தன்னிடம் இருந்த கத்தியால் ஜெகன்மோகன் ரெட்டியை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் ஜெகன்மோகன் ரெட்டியின் இடது கையில், தோள்பட்டைக்கு கீழே காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது.
[ஜெகன் மோகனை கத்தியால் தாக்கியவர் யார் என்று தெரிந்தால் அதிர்ச்சியாவீர்கள்.. குத்த காரணம் அதைவிட ஷாக்]
இதை பார்த்த காவல்துறையினர் உடனடியாக ஓடி வந்து அந்த நபரை பிடித்து மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் பாதுகாத்தனர். அந்த நபரிடம் இருந்து கோழி சண்டையில் பயன்படுத்தப்படும் சிறிய வகை கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் அந்த நபர் பெயர் ஸ்ரீனிவாஸ் என்று தெரியவந்தது. விமான நிலையத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாளராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.
ஜெகன்மோகன் ரெட்டிக்கு உடனடியாக விமான நிலையத்தில் முதலுதவி செய்யப்பட்டது. இதன்பிறகு விமானத்தில் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் எனது மருத்துவரிடம் உடலை பரிசோதிக்க உள்ளதாக தெரியவருகிறது. இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.