சோலார் மோசடி சரிதா நாயரை சிறையில் யார், யார் சந்தித்தார்கள்: உண்மையை மறைக்கும் போலீஸ்?
திருவனந்தபுரம்: சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதான பெண் தொழில் அதிபர் சரிதா நாயரை சிறையில் பார்க்க வந்தவர்கள் பற்றிய தகவல்கள் அழிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
சோலார் பேனல் மோசடி வழக்கில் பெண் தொழில் அதிபர் சரிதா நாயர் கைது செய்யப்பட்டு கேரளாவில் உள்ள அட்டக்குளங்காரா பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது 46க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சிறையில் இருக்கையில் அவரை பலர் சந்தித்து பேசியுள்ளனர்.
சிறையில் சரிதா நாயரை யார், யார் சந்தித்தார்கள் என்பதற்கான சாட்சியமான வருகைப் பதிவேட்டை சிறை கண்காணிப்பாளர் நசீரா பீவி சோலார் பேனல் மோசடி வழக்கை விசாரித்து வரும் சிவராஜன் கமிஷனிடம் அளித்துள்ளார். அந்த பதிவேட்டில் சரிதாவை பார்க்க வந்தவர்களில் பலரின் பெயர்கள் வெள்ளை மை வைத்து அழிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில பக்கங்கள் கிழிக்கப்பட்டுள்ளன. இது தவிர சரிதாவை பார்க்க வந்த அனைவரின் பெயரும் பதிவேட்டில் பதிவு செய்யப்படவில்லை. சிலர் பதிவேட்டில் கையெழுத்திடாமலேயே அவரை சந்தித்து பேசியுள்ளனர்.
அனுமதிக்கப்பட்ட நேரம் தவிர பிற நேரங்களிலும் சரிதாவை சந்தித்து பேச போலீசார் அனுமதித்ததை கமிஷன் கண்டுபிடித்துள்ளது. சரிதாவின் உறவினர் ஆதர்ஷ் உரிய ஆவணம் அளிக்காமல் அவரை சந்தித்ததாக நசீரா பீவி தெரிவித்துள்ளார்.
சோலார் பேனல் மோசடியில் பெரிய அரசியல்வாதிகள், மலையாள திரை உலகில் பிரபலமாக உள்ளவர்களின் பெயர்களை வெளியிடுவேன் என்று சரிதா அண்மையில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சரிதா அந்த சிறையில் 2013ம் ஆண்டு ஜுலை மாதம் 27ம் தேதி முதல் 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ம் தேதி வரை இருந்தார். அதன் பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.