என் "மேஜிக்" எனக்கே வேலை செய்யலையே... ஆசாராம் பாபு புலம்பல்
மும்பை: கார் விபத்து வழக்கில் உடனடியாக ஜாமீன் பெற்று விடுதலையான சல்மான் கான் வழக்கை சுட்டிக் காட்டி, தனக்கு இதுபோல நடக்காமல் போய் விட்டதே என்று கிண்டல் அடித்துப் புலம்பியுள்ளார் பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபு.
கார் விபத்து வழக்கில் சல்மான் கானுக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து உடனடியாக அவர் பாம்பே உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு செய்தார். அப்பீலும் செய்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், அன்றே விசாரணை நடத்தி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் ஆசாராம் பாபுவின் ஆதரவாளர்கள் இதைச் சுட்டிக் காட்டி சமீபத்தில் டிவிட்டரில் சரமாரியாக போஸ்ட்டுகள் போட்டு வந்தனர். இந்த நிலையில் ஆசாராம் பாபுவே இதுகுறித்து குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து ஆசாராம் பாபு கூறியதாக ஒரு இதழில் வெளியாகியுள்ள பேட்டியில், சல்மான் கான் என்ன மாயம் செயதார்... அவர் 20 நிமிடம் கூட சிறைக்குள் போகவில்லையே.. ஆனால் நான் 20 மாதமாக சிறைககுள் இருக்கிறேன். நான் பெயிலுக்கு முயற்சித்தபோது ஏதாவது ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஏற்பட்டிருக்கும் போல. அதான் கிடைக்கவில்லை.
எனது மாஜிக் எனக்கே சரிப்பட்டு வரவில்லை. நான் சல்மான் கானிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் போல என்று கூறியுள்ளார் ஆசாராம் பாபு.
தனது ஆசிரமத்தில் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தது, மிரட்டியது உள்ளிட்ட பல்வேறு கடுமையான புகார்களில் சிக்கி சிறையில் இருக்கிறார் ஆசாராம் பாபு. இவரது வழக்கி் தொடர்புடைய 2 முக்கிய சாட்சிகளை சிலர் ஏற்கனவே சுட்டுக் கொன்று விட்டனர். தொடர்ந்து சாட்சிகளை இந்தக் கும்பல் குறி வைத்து துரத்திக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.