ஜம்மு காஷ்மீர் டிடிசி தேர்தல்: குப்கர் கூட்டணி 122-ல் முன்னிலை... 70-ல் வெற்றி பெற்று அசத்திய பாஜக!
ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணிக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது. இதேபோல் பாஜகவும் அசத்தி உள்ளது. பாஜக 70 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
லடாக்: ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணிக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது. பாஜக 70 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி 122 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 27 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ரத்து செய்யப்பட்டு ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதனையடுத்து முதல் முறையாக ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் மொத்தம் 8 கட்டங்களாக நடைபெற்றது. கடந்த நவம்பர் 8, டிசம்பர் 1,4,7,10,13,16 மற்றும் 19ம் தேதிகளில் தேர்தல் நடைபெற்றது.

வாக்குச் சாவடிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மதியம் 2 மணி வரை நடைபெற்றது. மொத்தமாக 50 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் எட்டு கட்டமாக நடைபெற்ற மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 9 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி), மக்கள் மாநாடு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணியை உருவாக்கி முதல் முறையாக தேர்தலை சந்தித்தன.
இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக மற்றும் மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லாவின் அரசியல் கட்சிகளான மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டு கட்சி இணைந்து அமைத்துள்ள குப்கர் கூட்டணி, புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சி, சுயேட்சைகள் என மொத்தம் 2 ஆயிரத்து 181 பேர் போட்டியிட்டனர். தேசிய கட்சிகளான பா.ஜ.க. மற்றும் காங்கிரசும் தனித்தனியாக களமிறங்கின.

இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. அதில், பல இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 14 மாவட்ட வளர்ச்சி கவுன்சில் இடங்களை கொண்ட ஸ்ரீநகருக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றி பெற்றவர்கள் விபரம்:
- அப்னி கட்சி 3
- மக்கள் ஜனநாயக கட்சி 1
- தேசிய மாநாட்டுக்கட்சி 1
- ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கம் 1
- பாஜக 3
சுயேட்சைகள் 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக ஸ்ரீநகர் மாவட்ட தேர்தல் அதிகாரி சஷீத் சௌதிரி தெரிவித்துள்ளார்.
ஜம்முகாஷ்மீர் மாவட்ட கவுன்சில் தேர்தலில் ஸ்ரீநகரில் பாஜக தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. அந்த கட்சியை சேர்ந்த அஜீஸ் ஹசன் என்ற வேட்பாளர் ஸ்ரீநகரின் பல்ஹமா பகுதியில் உள்ள ஹொனொம்-2 என்ற தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார்.
மேலும், 155 இடங்களுக்கான முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, குப்கர் கூட்டணி 107இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக 62 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. காஷ்மீரில் உள்ள புல்வாமா பாம்போரோ, பந்திப்பூரா உள்பட 8 பகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் 22 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பெரும்பாலான இடங்களில் மெகபூபா மும்தி, பரூக் அப்துல்லா இணைந்து அமைத்துள்ள குப்கர் கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.
இந்த தேர்தல் மக்கள் கூட்டணிக்கும், பாஜகவுக்கும் இடையிலான நேரடி மோதலாக கருதப்படுகிறது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மீண்டும் கொண்டு வருவோம் என்று மக்கள் கூட்டணி பிரச்சாரம் செய்தது. மக்கள் கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளதால் மக்கள் ஆதரவு குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி என்பது தெளிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications