ஜம்மு காஷ்மீர்: 24 தொகுதிகளில் நாளை மறுநாள் முதல் கட்ட தேர்தல் - பிரசாரம் ஓய்ந்தது!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 24 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதனையடுத்து முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 24 தொகுதிகளிலும் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது. ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 19-ந் தேதி பிரதமர் மோடி மீண்டும் பிரசாரம் செய்கிறார்; இன்று 3 இடங்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் 24 தொகுதிகளில் நடைபெற உள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் இது. ஜம்மு காஷ்மீரில் 2014-ல்தான் கடைசியாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
முதல் கட்ட தேர்தல் காஷ்மீர் பிராந்தியத்தில் 16 தொகுதிகளிலும் ஜம்முவில் 8 தொகுதிகளிலும் நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீரில் பாஜக, காங்கிரஸ்- தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி, மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் மாநில கட்சிகள் களம் காண்கின்றன.
ஜம்மு காஷ்மீர் முதல் கட்ட தேர்தலில் 23 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 219 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி பிஜ்பிகாரா தொகுதியில் களம் காண்கிறார்.
ஜம்மு காஷ்மீர் முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 3 இடங்களில் பிரசாரம் செய்கிறார். ஜம்மு காஷ்மீரில் பிரதமர் மோடி செப்டம்பர் 19-ந் தேதி மீண்டும் பிரசாரம் செய்ய உள்ளார். ஜம்மு காஷ்மீரில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் தேர்தலை சீர்குலைக்கும் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை முறியடிக்க பாதுகாப்புப் படையினரும் உஷார் நிலையில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications