காஷ்மீர் தேர்தல்: தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை- 'தலை'களை அனுப்பிய காங்கிரஸ்!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சியுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கேசி வேணுகோபால், சல்மான் குர்ஷித் ஆகியோரை ஶ்ரீநகருக்கு டெல்லி மேலிடம் அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸுக்கு குறைவான இடங்களை மட்டுமே ஒதுக்க தேசிய மாநாட்டுக் கட்சி முன்வருவதால்தான் டெல்லி மேலிடம் இந்த தலைவர்களை ஶ்ரீநகருக்கு அனுப்பி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரில் முதல் கட்ட சட்டசபை தேர்தல் செப்டம்பர் 18-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது. ஜம்மு காஷ்மீரில் 24 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும் வேட்பு மனுத் தாக்கல் மந்தமாகவே இருந்து வருகிறது. இன்றுதான் பாஜக முதலில் 44 வேட்பாளர்களை அறிவித்தது. பின்னர் அதனை வாபஸ் பெற்றது. இதனையடுத்து மீண்டும் 15 வேட்பாளர்களை மட்டும் அறிவித்தது.
காங்கிரஸ் கட்சியும் தேசிய மாநாட்டுக் கட்சியும் இன்னமும் கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன. காங்கிரஸுக்கு குறைவான இடங்களையே ஒதுக்க தேசிய மாநாட்டுக் கட்சி முன்வந்துள்ளதாம். ஆனால் காங்கிரஸ் கட்சியோ ஜம்முவில் அதிகமான இடங்களை தேசிய மாநாட்டுக் கட்சியும் காஷ்மீரில் அதிகமான இடங்களை காங்கிரஸும் பகிர்ந்து கொள்ளலாம் என கூறுகிறதாம். இதில்தான் இழுபறி நீடிக்கிறதாம்.
இந்த இழுபறியைத் தொடர்ந்துதான் மூத்த தலைவர்களான கேசி வேணுகோபால், சல்மான் குர்ஷித் ஆகியோரை ஶ்ரீநகருக்கு டெல்லி காங்கிரஸ் மேலிடம் அனுப்பி வைத்துள்ளதாம். ஶ்ரீநகரில் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோருடன் காங்கிரஸ் மேலிடப் பிரதிநிதிகள் நேரடியாக சந்தித்து தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய இருக்கின்றனராம்.
ஏற்கனவே மக்கள் ஜனநாயகக் கட்சியானது, காங்கிரஸும் தேசிய மாநாட்டுக் கட்சியும் வெறும் தொகுதிகளுக்கான கூட்டணியைத்தான் வைத்திருக்கின்றன. எங்களது செயல் திட்டத்தை ஏற்றால் அந்த கூட்டணியை ஆதரிக்கவும் தயார் என அறிவித்துள்ளது. மெகபூபா முப்தியின் இந்த கருத்து குறித்தும் ஶ்ரீநகர் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர்கள் விவாதிக்க உள்ளனர் என்கின்றன தகவல்கள்.












Click it and Unblock the Notifications