3 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்.. பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு தெரிவித்ததால் அதிரடி நடவடிக்கை
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் அரசு பணியில் இருந்து கொண்டே லஷ்கர் இ - தொய்பா, ஹிஸ்புல் உல் முஜாகிதீன் உள்ளிட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக போலீஸ்காரர் உள்பட 3 பேரை துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பணியில் இருந்து நீக்கினார்.
ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா செயல்பட்டு வருகிறார். இவர் பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர். இவர் கடந்த 2020ம் ஆண்டு முதல் ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநராக செயல்பட்டு வருகிறார்.

ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசமாக்கிய பிறகு அங்கு பயங்கரவாதிகளின் செயல்பாட்டை தடுக்கும் வகையில் மனோஜ் சின்ஹாவை துணை நிலை ஆளுநராக மத்திய அரசு நியமித்தது.
குறிப்பாக அரசு துறைகளில் பணியாற்றி கொண்டு பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருப்போரை களையெடுக்கும் பணியை மனோஜ் சின்ஹா மூலம் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி பல அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்று 3 அரசு பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி போலீஸ்காரரான மாலிக் இஸ்தாக் நசீர், ஆசிரியராக உள்ள அஜிஸ் அகமது, ஸ்ரீநகரில் செயல்பட்டு அரசு மெடிக்கல் கல்லூரியின் ஜூனியர் உதவியாளர் வாசீம் அகமது கான் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் 3 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2020ம் ஆண்டில் இருந்து இதுவரை மொத்தம் 70 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 31 (2) (சி) ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை என்பது மேற்கொள்ளப்பட்டு ருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானின் ஆதரவு பயங்கரவாத அமைப்பான ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி 26 பேரை கொன்றனர்.
அதன்பிறகு நம் நாடு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள், விமானப்படை தளங்கள், ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இருநாடுகள் இடையே மோதல் வலுத்தது. பாகிஸ்தான் ட்ரோன், ஏவுகணை, போர் விமானங்கள் மூலம் நம்மை தாக்க முயன்றது. இந்த தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டது. மேலும் நம் நாட்டின் தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் நம்மிடம் மண்டியிட்டது. இதையடுத்து மோதல் முடிவுக்கு வந்தது.
இந்த பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களை தேடும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஒரு போலீஸ்காரர், கல்லூரி உதவியாளர் உள்பட 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications