காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு, பெண்களின் சல்வாருக்குள் பணத்தை அனுப்பி விடும் பாக்.! உளவுத்துறை ஷாக்
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பிரிவினைவாதத்தை தூண்டுவோருக்கு ஹவாலா வழியில் பணம் பட்டுவாடா செய்யப்படுவது அம்லமாகியுள்ளது. காஸ் சிலிண்டர், சல்வார் கமீஸ் போன்றவற்றின் மூலம் கூட பணம் கடத்தப்படுகிறதாம்.
உலகமெங்கும் உள்ள தீவிரவாத ஆதரவாளர்கள், காஷ்மீர் குறித்து அனுதாப மனநிலை கொண்டவர்கள், பிரிவினைவாதிகளுக்கு பணத்தை தண்ணீராய் செலவழித்து அனுப்பி வைக்கிறார்கள்.
இந்த பணம் எல்லையை தாண்டி காஷ்மீருக்குள் பல வகைகளில் ஹவாலா முறையில் வருகிறது. காஸ் சிலிண்டர், சல்வார் கமீஸ் போன்றவற்றின் வழியாக பணம் வருவதாக கூறுகிறார்கள் உளவுத்துறையினர்.
பெண்கள் அணியும் ஆடைக்குள் வைத்து பணம் கடத்தப்படும்போது அதை சோதித்து பார்ப்பது சிக்கலாகிவிடும் என்பதால் இதுபோன்ற வழிமுறைகளை தீவிரவாத ஆதரவாளர்கள் கையாளுகிறார்கள்.
2002ல் காஷ்மீர் பெண் ஒருவர் சல்வாருக்குள் ரூ.48 லட்சம் பணம் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது பிரிவினைவாதி யாசின் மாலிக்கிற்காக கொண்டுவரப்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்தது.
ஆயுதம் வாங்குவது, ஆள் திரட்டுவது போன்றவற்றுக்கு இந்த பணம் பயன்படுத்தப்படுகிறது. எல்லை தாண்டி வாகனம் ஓட்டிச் செல்லும் லாரி டிரைவர்கள் மூலம் சுமார் ரூ.80 கோடி திரட்டப்பட்டுள்ளது என்று உளவுத்துறை தனது அறிக்கையொன்றில் சுட்டிக் காட்டுகிறது.
குலாம் முகமது பட் என்பவர் இப்படி பணம் கடத்தியதற்காக மூன்று முறை கைது செய்யப்பட்டவர் என்கிறது போலீஸ் ரெக்கார்ட்.