பவன் கல்யாண் தான் ஆந்திர துணை முதல்வர்.. உறுதியளித்த சந்திரபாபு நாயுடு! ஆஹா இதை பாருங்க.. பரபர தகவல்
விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு நாளை பதவியேற்க உள்ள நிலையில், அம்மாநில துணை முதல்வர் பதவி ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாணுக்கு வழங்கப்படும் எனத் தெரிகிறது.
லோக்சபா தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக மத்தியில் ஆட்சியை அமைத்துள்ளது. பிரதமர் மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்று இருக்கிறார்.

அதேபோல இந்த லோக்சபா தேர்தலுடன் ஆந்திராவிலும் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அதில் தெலுங்கு தேசம் கட்சி மிகப் பெரியளவில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
துணை முதல்வராகும் பவன் கல்யாண்: இதற்கிடையே ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு நாளை புதன்கிழமை பதவியேற்க உள்ளார். இதற்கிடையே ஆந்திர மாநில துணை முதல்வர் பதவி ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாணுக்கு ஒதுக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ஆந்திர துணை முதல்வர் பதவிக்கு சந்திரபாபு நாயுடுவிடம் பவன் கல்யாண் விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கு அமைச்சரவையில் முக்கிய பங்கு இருக்கும் சந்திரபாபு நாயுடு உறுதி அளித்தாகக் கூறப்படுகிறது.
பாஜக: இது மட்டுமின்றி என்டிஏ கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் எனத் தெரிகிறது. உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்றிரவு ஆந்திராவுக்கு விரைந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் இறுதி முடிவெடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு நாளை காலை 11.27 மணிக்கு விஜயவாடாவின் புறநகரில் உள்ள கன்னவரம் விமான நிலையம் அருகே உள்ள கேசரபள்ளி ஐடி பூங்காவில் பதவியேற்க உள்ளார். முன்னதாக இன்றைய தினம் தான் தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் இணைந்து சந்திரபாபு நாயுடுவை தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர்.
ஆந்திர தேர்தல்: லோக்சபா தேர்தலுடன் ஆந்திராவில் சட்டசபைத் தேர்தலும் இணைந்து நடத்தப்பட்டது. இதில் பவன் கல்யாண் மற்றும் பாஜக உடன் கூட்டணி அமைத்துக் களமிறங்கிய தெலுங்கு தேசம் கட்சி மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. சட்டசபையில் அங்குள்ள 175 இடங்களில் தெலுங்கு தேசம் 135 சீட், பவன் கல்யாண் கட்சி 21 சீட், பாஜக 8 சீட்களை பெற்றுள்ளது. அதேபோல லோக்சபா தேர்தலிலும் 25இல் 21 இடங்களில் இந்தக் கூட்டணி வென்றது.
இந்தச் சூழலில் தான் சந்திரபாபு நாயுடு நாளை பதவியேற்கிறார். அவருடன் மேலும் சில தலைவர்களும் பதவியேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக சந்திரபாபு நாயுடுவுடன் தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளரும், சந்திரபாபு நாயுடுவின் மகனான நாரா லோகேஷ், ஜன சேனா தலைவர் என் மனோகர் ஆகியோரின் பதவியேற்பார்கள் எனக் கூறப்படுகிறது. நாளைய தினம் சந்திரபாபு நாயுடுவுடன் இதுபோல சிலர் மட்டுமே அமைச்சர்களாகப் பதவியேற்பார்கள் என்றும் அதன் பின்னரே அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
பதவியேற்பு விழா: இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. காலை 8.20 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் மோடி, காலை 10.40 மணிக்கு ஆந்திரா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications