ஜனதா கட்சிகளின் "சங்கமம்" நாளை அறிவிப்பு?
டெல்லி: 6 ஜனதா கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கட்சியாக 'அவதாரமெடுப்பது' குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகலாம் என கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா விஸ்வரூப வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பீகாரில் எதிரிகளாக இருந்த ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமாரும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் லாலு பிரசாத் யாதவும் கை கோர்த்து செயல்படத் தொடங்கினர்.

ஒரே கட்சியாக..
இதனைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக 'ஜனதா' பெயரில் இயங்கும் அனைத்து கட்சிகளும் ஒரே கட்சியாக இணைவது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சி, ராஷ்டிரிய லோக் தள் உள்ளிட்ட 6 கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்து இந்த ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்றனர்.

சமாஜ்வாடி ஜனதா தளம்
பின்னர் ஒருவழியாக 6 கட்சிகளும் இணைந்து சமாஜ்வாடி ஜனதா தளம் அல்லது சமாஜ்வாடி ஜனதா தள் என்ற பெயரில் இணைவது எனவும் இதன் தலைவராக முலாயம்சிங் யாதவை தேர்ந்தெடுப்பது எனவும் முடிவு எடுக்கப்பட்டது. அம்பேத்கர் பிறந்த நாளான இன்று இந்த அறிவிப்பு வெளியிடப்படக் கூடும் எனவும் கூறப்பட்டது.

முலாயம் தயக்கம்?
ஆனால் இந்த புதிய கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் முலாயம்சிங் யாதவ், தம்மையே பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிப்பதாக கூறப்பட்டது. மேலும் முலாயம்சிங் யாதவ், உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் மீதான வருமானத்துக்கும் அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில் மத்திய அரசு சி.பி.ஐ. விசாரணையை துரிதப்படுத்தி விடுமோ என்று அஞ்சியே இந்த நிபந்தனை விதித்ததாகவும் கூறப்பட்டது.

நாளை அறிவிப்பு?
இருப்பினும் இதனை நிராகரித்துள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் தியாகி, ஜனதா கட்சிகள் இணைவதில் சிறு சிறு தடங்கல்கள் இருந்தன... இவை அகற்றப்பட்டு வருகின்றன.. புதிய கட்சிக்கான அறிவிப்பு திட்டமிட்டபடி வெளியாகும் என்று கூறியுள்ளார்.

சைக்கிள் சின்னம்..
இந்த 6 கட்சிகளின் இணைப்பு நாளை வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது. புதிய கட்சியின் சின்னமாக சமாஜ்வாடி கட்சியின் சைக்கிள் சின்னமே இருக்கக் கூடும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications