ஜெ. வழக்கில் அப்பீல் செய்யுமா கர்நாடகா?: சட்ட வல்லுநர்களுக்கு ஓ.கே., காங். தயக்கம்!
பெங்களூரு: ஜெயலலிதா வழக்கில் கர்நாடகா மேல்முறையீடு செய்வது சட்டம் மட்டுமின்றி அரசியலையும் சார்ந்து உள்ளதாக தெரிகிறது.
ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து கர்நாடக ஹைகோர்ட் அவரை விடுதலை செய்துள்ள நிலையில், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யும் கடமை கர்நாடகாவுக்கு உள்ளது.
ஹைகோர்ட் அளித்த 919 பக்க தீர்ப்பை, கர்நாடக சட்ட குழு ஆய்வு செய்து வருகிறது. இதைத் தொடர்ந்துதான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்ய முடியும்.

நாள் கணக்கு
விடுதலை செய்யப்பட்ட வழக்கில் அதிகபட்சமாக 90 நாட்களுக்குள்ளும், தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகளில் அதிகபட்சம் 60 நாட்களுக்குள்ளும், மேல்முறையீடு செய்தாக வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. எனவே, கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய 90 நாட்கள் கால அவகாசம் உள்ளது.

அரசியல் பின்னணி
ஆனால், சட்டத்தை அடிப்படையாக கொண்டு மட்டுமே இந்த வழக்கை கர்நாடகம் அணுகவில்லை. அரசியல்ரீதியாகவும் இதை அணுகுவதாக இம்மாநில காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெல்லி காங்கிரஸ் தலைமையிடமிருந்து, மேல்முறையீடு செய்ய இசைவு வரும்வரை, கர்நாடக அரசு சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்யாது என்றே தெரிகிறது.

மேகதாது விவகாரம்
மேகதாது விவகாரத்தில் தமிழகம், கர்நாடகம் இடையே தகராறு உள்ளது. இந்த நேரத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக மேல்முறையீடு செய்தால், மேகதாது விவகாரத்தை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும் என்ற அச்சமும் கர்நாடகாவுக்கு உள்ளது. எனவே, மேகதாது அணை கட்டி, நமது மாநில நலனை பார்த்துக்கொள்ளலாம், ஜெயலலிதாவை ஏன் எதிர்க்க வேண்டும் என்றும் கர்நாடக அரசு யோசித்து வருவதாக தெரிகிறது.

சட்ட வல்லுநர்கள் ரெடி
ஆனால், ஹைகோர்ட் தீர்ப்பில் பெரும் குளறுபடிகள் இருப்பதாக, கூறும் கர்நாடக சட்ட வல்லுநர்கள், இந்த வழக்கு மேல்முறையீட்டுக்கு உகந்தது என்ற கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆச்சாரியாவும் வெளிப்படையாக இதை கூறிவிட்டார்.

இரு பாயிண்டுகள்
கர்நாடகா மேல்முறையீடு செய்தால், ஹைகோர்ட்டில் தங்களை சேர்க்காமலே வழக்கு நடத்தி முடிக்கப்பட்டதையும், கடன் கணக்கீட்டில் ஏற்பட்டுள்ள பிழைகளையும் முன்னிறுத்த திட்டமிட்டுள்ளது. ஆனால் இதற்கு கர்நாடக அரசு சம்மதிக்குமா, காங்கிரஸ் மேலிடம் பச்சைக்கொடி காட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications