பிரிக்க முடியாதது.. சொத்துக்குவிப்பு வழக்கும்-ஆச்சாரியாவும்!
பெங்களூர்: ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக பி.வி.ஆச்சாரியாவே தொடர உள்ளார்.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், 2005ம் ஆண்டு பிப்ரவரி 19ம்தேதி, கர்நாடக தரப்பு அரசு சிறப்பு வக்கீலாக பி.வி.ஆச்சாரியா நியமிக்கப்பட்டார். அவர் தொடர்ந்து வாதங்களை முன்னெடுத்து வைத்து, ஜெயலலிதா தரப்புக்கு மிகவும் நெருக்கடி கொடுத்தார்.

இந்நிலையில், 2012 ஆகஸ்ட் 12ம்தேதி, ஆச்சாரியா, அரசு வழக்கறிஞர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். 2013 ஜனவரி மாதத்தில், இந்த ராஜினாமாவை அப்போதைய கர்நாடக பாஜக அரசு ஏற்றுக்கொண்டது. நெருக்கடிதான் தனது ராஜினாமாவுக்கு காரணம் என்று பிறகு தனது சுய சரிதையில் ஆச்சாரியா தெரிவித்திருந்தார்.
இதையடுத்து 2013 பிப்ரவரி 2ம்தேதி, கர்நாடக அரசு வக்கீலாக பவானிசிங் நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் தொடர்ந்து, குற்றவாளிகள் தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளானார். நீதிமன்றமும் அவரை கண்டித்தது. அன்பழகன் தரப்பு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், பவானிசிங் நியமனம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
எனவே கடந்த ஏப்ரல் 28ம் தேதி மீண்டும் அரசு சிறப்பு வழக்கறிஞராக ஆச்சாரியாவை நியமித்தது கர்நாடக அரசு. ஆனால், இவர் தனது வாதத்தை சமர்ப்பிக்க ஒருநாள் மட்டுமே அவகாசம் இருந்தது. இருப்பினும் 18 பக்க வாதங்களை ஹைகோர்ட்டில் சமர்ப்பித்தார் ஆச்சாரியா.
19 வருட வழக்கில், ஒருநாள் மட்டுமே அரசு தரப்பு வாதிட அனுமதிக்கப்பட்டது, நியாயமில்லை என்று ஆச்சாரியா கூறிவருகிறார். அதிலும், நேரடி வாதத்தைவிட எழுத்துப்பூர்வ வாதத்தில் சக்தி இருக்காது என்பதும் ஆச்சாரியா ஆதங்கம். ஆனால், இப்போது சுப்ரீம்கோர்ட்டில் வாதிட ஆச்சாரியாவையே நியமிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதன் மூலம், ஆச்சாரியாவின் ஆதங்கம் தணிந்துள்ளது. அவருடன் இணைந்து பணியாற்றிய சந்தேஷ் சவுட்டா தற்போதும் சுப்ரீம்கோர்ட்டில் ஆச்சாரியாவுடன் கைகோர்க்க உள்ளார்.
இதனால், சட்ட பாயிண்டுகளுடன் பாய தயாராக உள்ளது ஆச்சாரியா அன்டு டீம். பொறுத்திருந்து பார்ப்போம். யார் பக்கம் தாயம் விழுகிறது என்பதை..












Click it and Unblock the Notifications