18 வருடமாக இழுக்கப்பட்ட வழக்கில், மூன்றே நிமிடங்களில் தீர்ப்பு!
பெங்களூரு: சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கில், கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி வெறும் 3 நிமிடங்களில் தீர்ப்பை வாசித்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறப்பு கோர்ட் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் சிறை தண்டனை, அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

ஜெயலலிதா தரப்பு செய்த மேல்முறையீட்டில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி குமாராசாமி அறிவித்தார்.
காலை 11 மணிக்கு சரியாக கோர்ட் ஹாலுக்குள் வந்த குமாரசாமி, 919 பக்கங்கள் கொண்ட தீர்ப்பின், முக்கிய அம்சங்களை, 3 நிமிடங்களில் தீர்ப்பை வாசித்து முடித்து கிளம்பினார்.
தமிழகம் மற்றும் கர்நாடகாவின் பல்வேறு கோர்ட்டுகளில் 18 ஆண்டுகள் நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பை 3 நிமிடங்களில் வாசித்து முடித்துவிட்டார் குமாரசாமி.
சீனியரை தூக்கி வைத்துக் கொண்டாடிய அதிமுக வக்கீல்கள்
நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பை வாசித்து முடித்து விட்டுக் கிளம்பியதும், நீதிபதி குமாரசாமிக்கு அதிமுக வக்கீல்கள் பெரிய கும்பிடு போட்டு வணக்கம் செலுத்தினர். பின்னர் தங்களது சீனியர் வக்கீலை தூக்கி தோளில் வைத்துக் கொண்டு ஜெயலலிதாவை வாழ்த்திக் கோஷமிட்டனர்.
கண்டித்த மற்ற சீனியர்கள் - போலீஸார்
இதைப் பார்த்து அங்கு கூடியிருந்த மற்ற வக்கீல்கள், குறிப்பாக பிற சீனியர் வக்கீல்கள் இதுபோல கோர்ட்டை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்று அதிமுக வக்கீல்களைக் கண்டித்தனர். அங்கிருந்த போலீஸாரும் கண்டித்தனர். இதையடுத்து அதிமுக வக்கீல்கள் அமைதியாக வெளியேறினர்.












Click it and Unblock the Notifications