ஜெ. வழக்கில் அப்பீல் வேண்டாம்.. கர்நாடக அரசுக்கு காங்கிரஸ் சட்டப்பிரிவு கடிதம்!
பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் தேவையில்லை என்று கர்நாடக அரசை, அம்மாநில காங்கிரஸ் கமிட்டியின் சட்டப்பிரிவு கடிதம் எழுதி கேட்டுக் கொண்டுள்ளது.
காங்கிரஸ் கமிட்டி சட்டப்பிரிவு தலைவர் தனஞ்சயா சமீபத்தில் அளித்த பேட்டியில், ஜெயலலிதா வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய கூடாது என்றார். இந்நிலையில், அவர் தற்போது கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியும் இதை வலியுறுத்தியுள்ளார்.

தனஞ்சயா, கர்நாடக அரசிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை சுப்பிரமணியன் சுவாமி தான் தாக்கல் செய்தார். முதலில் தமிழக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படியே கர்நாடகாவிற்கு அந்த வழக்கு மாற்றப்பட்டது.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசின் செயல்பாடு நிர்வாக ரீதியிலானது மட்டுமேயன்றி, சட்டம் சார்ந்தது அல்ல. இந்த வழக்குத் தொடர்பாக, சிறப்பு நீதிமன்றம், அல்லது உயர் நீதிமன்ற விசாரணையிலோ, அல்லது வாதங்களிலோ, ஒரு தரப்பாக கர்நாடக அரசு செயல்படவில்லை.
இந்த வழக்கு தமிழகத்திலிருந்து மாற்றப்பட்டபோது, உச்ச நீதிமன்றத்தில், கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவில், இந்த வழக்கு விசாரணை கர்நாடகாவில் நடைபெறுவதை விரும்பவில்லை என்று குறிப்பிட்டிருந்தது. அதனால், சொத்துக்குவிப்பு வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்வது, நல்லதொரு அணுகுமுறையாக இருக்காது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications