சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளிதான்: உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு பதில்
டெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும், குற்றவாளிகள் என தீர்ப்பளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில், கர்நாடக அரசு, பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நான்கு பேரை கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் விடுவித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக அரசு மற்றும் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் எதிர் மனு தாக்கல் செய்தனர். இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய கர்நாடக அரசு மற்றும் திமுக தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து கடந்த 18ம் தேதி அன்பழகன் தனது பதில் மனுவை தாக்கல் செய்தார். பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பை இறுதி செய்யுமாறும், ஹைகோர்ட் தீர்ப்பில் கணித பிழை இருப்பதாகவும், அன்பழகன் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், கர்நாடக அரசு சார்பில் வழக்கறிஞர் அரிஸ்டாடில் இன்று பதில் மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார். கிட்டத்தட்ட, அன்பழகன் மனுவைபோன்றே, இந்த மனுவிலும் கோரிக்கை அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா பல்வேறு விவகாரங்களை ஆராய்ந்து அளித்த தீர்ப்பில், ஜெயலலிதா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என்று கூறப்பட்டுள்ளது. கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுவித்து அளித்த தீர்ப்பில், பல்வேறு கணித பிழைகள் உள்ளன. எனவே குன்ஹா தீர்ப்பை நிலைநாட்டி, ஜெயலலிதா உள்ளிட்டோரை குற்றவாளிகள் என்று அறிவிக்க வேண்டும். இவ்வாறு கர்நாடக அரசு தரப்பு மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications