ஜெ. பிறந்தநாள் பரிசு வழக்கு: சுப்ரீம் கோர்ட் 4 வாரங்களுக்கு ஒத்திவைப்பு
டெல்லி: பிறந்த நாள் பரிசு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை நான்கு வாரங்கள் ஒத்திவைத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த 1992ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது பிறந்த நாளில் பல்வேறு இடங்களில் இருந்து பரிசுகள் வந்தன. இதில் 57 பேரிடமிருந்து 89 டிடிகளும், 3 லட்சம் அமெரிக்க டாலரும், ரொக்கப்பணமும் மொத்தம் ரூ. 2 கோடி வந்தது. முதல்வராக பதவி வகித்து வருபவர் தனக்கு வரும் அன்பளிப்பு மற்றும் பரிசுகளை அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும். ஆனால், ஜெயலலிதா தனது சொந்த வங்கிக் கணக்கில் இந்த பரிசு பணத்தை டெபாசிட் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து கடந்த 1996ம் ஆண்டு சிபிஐ விசாரணை நடத்தி ஜெயலலிதா மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் பரிசுப் பணத்திற்கு ஏற்பாடு செய்ததாக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சாட்சி விசாரணை நடைபெறும் நிலையில், வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக்கோரி ஜெயலலிதா, செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி கே. என். பாஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததில் சிபிஐ காலதாமதம் செய்துள்ளது. எனவே, இந்த வழக்கிலிருந்து ஜெயலலிதா உள்ளிட்ட 3 பேரையும் விடுதலை செய்கிறேன் என்று கடந்த 2011 செப்டம்பர் 30ம் தேதி தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மேல் முறையீட்டு மனு கடந்த 3 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் பினாகி சந்திரகோஸ், அமித்தவராய் தேசாய் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.
சிபிஐ தரப்பில் மூத்த வக்கீல் பட்டுவாலியாவும், ஜெயலலிதா தரப்பில் மூத்த வக்கீல் சேகர்நாசேவும் ஆஜரானார்கள். சிபிஐ தரப்பில் ஆஜரான வக்கீல் பட்டுவாலியா, வழக்கில் தாமதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாக காரணம் கூறி உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது. இந்த வழக்கை விசாரிக்க விரிவான வாதத்தை முன்வைக்க வேண்டும் என்றார்.
ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வக்கீல் சேகர்நாசே, 1990ம் ஆண்டு பரிசு பொருள் பெற்றதான வழக்கில் 2006ல் குற்றப்பத்ரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மிககாலதாமதமான தாக்கல். இது உள்நோக்கம் கொண்டது.எனவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதைதொடர்ந்து நீதிபதிகள், வழக்கில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளதால் வழக்கை நான்கு வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனர்.












Click it and Unblock the Notifications