பெங்களூர் சிறையில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு சலுகை காட்டவில்லை: போலீஸ் அதிகாரி பேட்டி
பெங்களூர்: சிறைச்சாலையில் ஜெயலலிதா ஆரோக்கியமாக உள்ளார், அவருக்கு எந்த சிறப்பு சலுகையும் காட்டப்படவில்லை என்று பெங்களூர் மத்திய சிறைச்சாலை டிஐஜி ஜெய்சிம்ஹா தெரிவித்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை பெற்று பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் சிறைச்சாலைக்குள் எப்படி உள்ளார் என்ற விவரம், சிறைத்துறை வட்டாரங்கள் மூலமாக மீடியாக்களுக்கு கசிந்து கொண்டிருந்தது. ஆனால், அதிகாரப்பூர்வமாக யாரும் பேட்டியளிக்கவில்லை.
இந்நிலையில் முதன்முறையாக, சிறைத்துறை டிஐஜி ஜெய்சிம்ஹா இன்று பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: சிறையில் ஜெயலலிதா மிகுந்த ஆரோக்கியமாக உள்ளார். அவருக்கு அவ்வப்போது டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை நடத்தி உடல் நிலையை கண்காணித்தபடி உள்ளனர்.
சிறையில் தயாரிக்கப்படும் சாப்பாடுதான் ஜெயலலிதாவுக்கு வழங்கப்படுகிறது. அதே நேரம், டாக்டர்கள் என்ன பரிந்துரைத்துள்ளார்களோ, அந்த சாப்பாட்டைதான் ஜெயலலிதாவுக்கு அளித்துவருகிறோம்.
ஜெயலலிதா சிறையில் இதுவரை யாரையும் சந்திக்கவில்லை. அதேபோல அவருக்கு வெளியே எங்கும் சிகிச்சை கொடுக்கவும் இல்லை. அனைத்து மருத்துவ வசதிகளும் சிறைக்குள்ளேயே அளிக்கப்படுகிறது.
ஜெயலலிதாவுக்கு சிறைக்குள் ஏசி போன்ற நவீன வசதிகள் அளிக்கப்படவில்லை. சாதாரண அறையில்தான் அடைக்கப்பட்டுள்ளார். முன்னாள் முதல்வர் என்பதற்காக சிறப்பு சலுகை எதுவும் சிறைக்குள் காட்டப்படவில்லை. அதே நேரம் ஜெயலலிதாவுக்கு சிறை கைதிகள் அணியும் வெள்ளை சேலை வழங்கவில்லை. அவர் வழக்கம்போல வண்ண சேலைகள் அணிய அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.