சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீடு: ஜெ. தரப்பை தொடர்ந்து சசிகலா தரப்பு வாதம் முடிந்தது!
பெங்களூரு: கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில், சசிகலா தரப்பு வாதம் நிறைவடைந்தது.
சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளியாக தீர்ப்பு வழங்கியது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம். இதை எதிர்த்து ஜெயலலிதா மற்றும் சக குற்றவாளிகள் 3 பேர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணை கர்நாடக ஹைகோர்ட் சிறப்பு அமர்வு முன்னிலையில் நடந்துவருகிறது.

வழக்கின் ஏ-1 குற்றவாளி ஜெயலலிதா என்பதால், முதலில் அவரது தரப்பு வாதிட அனுமதிக்கப்பட்டது. வழக்கின் ஆரம்பத்தில் ஜெயலிலதாவுக்காக வக்கீல் குமார் ஆஜரானார். பிறகு மூத்த வக்கீல் நாகேஸ்வரராவ் வாதாடினார். கடைசியாக குமார் சில வாதங்களை மீண்டும் முன்வைத்தார். ஆக மொத்தம் ஜெயலலிதா சார்பில் 14 நாட்கள் வாதம் முன்வைக்கப்பட்டது.
பெரும்பாலும், லஞ்ச ஒழிப்பு துறை ஜெயலலிதாவின் சொத்துக்களை கூடுதலாக மதிப்பிட்டுவிட்டதாகவே வக்கீல்கள் வாதத்தை முன்வைத்தனர். இந்நிலையில் ஜனவரி 28ம்தேதி முதல் சசிகலா தரப்பு வழக்கறிஞர் பசந்த்குமார் வாதத்தை முன்வைக்க தொடங்கினார்.
சசிகலா வக்கில் இன்று 9வது நாளாக வாதத்தை முன்வைத்து முடித்துக் கொண்டார். நாளை, இளவரசி மற்றும் சுதாகரன் சார்பில் வாதம் தொடங்க உள்ளது. இன்னும் இரு நாட்களில் அவர்கள் தரப்பு வாதம் முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு வழக்கோடு சம்மந்தப்பட்ட 6 கம்பெனிகள் சார்பில் சுமார் இரு நாட்கள் வாதம் நடைபெறும். அதன்பிறகு ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை நீதிபதி வழங்க வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications