ஜெ. சொத்து குவிப்பு வழக்கு- அரசு வழக்கறிஞர் நீக்கத்துக்கு இடைக்கால தடை- உச்சநீதிமன்றம்

1991-96ஆம் ஆண்டு வரை தமிழக முதல்வராக பதவி வகித்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார் என்பது வழக்கு. இந்த வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா வழக்கில் அரசு வழக்கறிஞராக இருந்த பவானிசிங்கை நீக்கி கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், புதிய அரசு வழக்கறிஞரை கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியுடன் கலந்து ஆலோசித்து நியமித்துக் கொள்ள அனுமதி கொடுத்தது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து கடந்த 6-ந் தேதி கர்நாடகா அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில் ஜெயலலிதா வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜராகக் கூடாது என்று கூறப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் பி.எஸ். சௌஹான், எஸ்.ஏ. பாப்டே அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்குரைஞர் முகுல் ரோத்தகி, பெங்களூர் தனி நீதிமன்றத்தில் பவானி சிங் ஆஜராகக் கூடாது என்ற புதிய உத்தரவை கர்நாடக அரசு பிறப்பித்துள்ளது. பவானி சிங் நீக்கத்துக்கான உத்தரவை கர்நாடகம் திரும்பப் பெற்றுக் கொண்டால், புதிய வழக்குரைஞர் நியமிக்கப்படும் வரை பவானி சிங்தான் சிறப்பு வழக்குரைஞராக ஆஜராக வேண்டும் என்பதுதான் பொருள். ஆனால், அரசியல் நெருக்குதலால் கர்நாடக அரசு இந்த வழக்கில் செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது என்றார்.
இதைத் கேட்ட நீதிபதிகள், பவானி சிங் ஆஜராகாமல் இருக்க கர்நாடக அரசு கடந்த 6-ந் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கிறோம். இது தொடர்பாக ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள மனுவுக்கு 10 நாட்களுக்குள் கர்நாடக அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications