ஜெ. அப்பீல் வழக்கு.. நாளையும் தொடர்கிறது சசி வக்கீல் வாதம்.. ஆச்சார்யா பதிலும் நாளையே தாக்கல்
டெல்லி: முதல்வர் ஜெயலலிதாவை சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவித்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையில் நாளையும் சசிகலாவின் வக்கீல் வாதம் தொடர்கிறது. அதைத் தொடர்ந்து அனைத்துத் தரப்பு வாதங்களுக்கும் கர்நாடக அரசு தரப்பில் பதிலளிக்கப்படுகிறது.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடகா அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் பெஞ்ச் விசாரித்து வருகிறது.
இதுவரை கர்நாடகா அரசு, ஜெயலலிதா தரப்பு இறுதிவாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே தமது இறுதிவாதங்களை முன்வைத்து வருகிறார். ஏப்ரல் 27ம் தேதியும் அவர் வாதிட்டார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை மே 3-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நாளையும் நாப்டே தனது வாதத்தைத் தொடரவுள்ளார். அதைத் தொடர்ந்து கர்நாடக அரசுத் தரப்பில் பதில் அளிக்கப்படவுள்ளது. அத்துடன் விசாரணை முடிவடைந்து இறுதித் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படும்.
நாளை கர்நாடக அரசுத் தரப்பில் பி.வி. ஆச்சார்யா தனது பதில் மனுவைத் தாக்கல் செய்வார். குறுகிய பதிலாக அவரது பதில் மனுவைத் தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடகா அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக பி.வி. ஆச்சார்யா நியமிக்கப்பட்டதற்கு எதிராக மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரத்னம் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடகா அரசை அரசு தரப்பாக ஏற்கக் கூடாது; ஆகையால் கர்நாடகா அரசு வழக்கறிஞராக பிவி ஆச்சார்யா நியமித்தது செல்லாது எனக் கூறியுள்ளார். இந்த மனு மீதான விசாரணையும் நாளையே நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.