ஜெயலலிதா சிறைக்குச் சென்று இன்றோடு 19 நாட்கள்!
பெங்களூர்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறை சென்று 19 நாட்கள் ஆகும் நிலையிலும், இன்னும் கூண்டுக்கிளியாக அடைபட்டுள்ளாரே தவிர வெளியில் வருவதில்லை என்று சிறைத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதா கடந்த மாதம் 27ம்தேதி முதல், பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பேச்சு குறைவு
அவர் இதுவரை தன்னை சந்திக்க வந்த யாரையும் சந்திக்கவில்லை. இதுகுறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத சிறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மேடம் தனக்கு ஒதுக்கப்பட்ட சிறைச்சாலை பகுதியிலேதான் தொடர்ந்து உள்ளார். சிறை அதிகாரிகளிடம் குறைவாகவே பேச்சு வைத்துக்கொள்கிறார். டாக்டர்கள் மற்றும் மருத்துவர்களிடம் மட்டுமே முழுமையாக பேச்சு வைத்துக்கொள்கிறார்" என்றார்.
வசதிகள்
சிறைக்குள் ஜெயலலிதாவுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. ஒருவேளை அனைத்து வசதிகளும் உள்ளேயே கிடைப்பதால், தனது சிறைப்பகுதியை தவிர வேறு எங்கும் வெளியே வருவதில்லை போலுள்ளது என்றும் சிறை அதிகாரி ஒருவர் கூறினார்.