'கூட்டுச் சதி'- ஜெ.வின் புதிய மனு: வழக்கை மேலும் இழுத்தடிக்கும் முயற்சி தோல்வி
இதன்மூலம் வழக்கை மேலும் இழுத்தடிக்கும் முயற்சியை நீதிமன்றம் முறியடித்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் அரசு தரப்பு, ஜெயலலிதா, சசிகலா தரப்பு இறுதி வாதம் நிறைவடைந்துவிட்டது. சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் சார்பில் அவர்களது வழக்கறிஞர் ஆஜராகி வாதிட்டு வருகின்றார்.
சொத்து குவிப்பு வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் ஜெயலலிதா உள்பட 4 பேரும் சேர்ந்து கூட்டுச் சதி செய்து முறைகேடாக சொத்துகளை குவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், இந்த கூட்டு சதி செய்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், எனவே குற்றப்பத்திரிகையில் இருந்து அந்த வார்த்தையை நீக்க வேண்டும் என்றும் கோரி ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் சார்பில் கடந்த 12ம் தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுக்கள் மீது நேற்று முன்தினம் விசாரணை முடிவடைந்தது நேற்று நீதிபதிஜான் மைக்கேல் டி குன்கா தீர்ப்பளித்தார். அவர் தனது உத்தரவில், இந்த புதிய மனு மீதான உத்தரவை இறுதி தீர்ப்பு வழங்கும் நேரத்தில் பிறப்பிப்பதாக நீதிபதி அறிவித்தார்.
இதையடுத்து சுதாகரன், இளவரசி சார்பில் நேற்று வாதிட்ட வழக்கறிஞர் அமித்தேசாய்,
சொத்து குவிப்பு வழக்கில் வி.என். சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் ஜெயலலிதாவின் பினாமி என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாததால் அவர்களை வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும்.
தி.மு.க பொதுசெயலாளர் க.அன்பழகன் சார்பில் தாக்கல் செய்துள்ள எழுத்துப்பூர்வமான ஆவணங்களில் சீத்தலாதேவி மற்றும் குணபூஷணம் ஆகியோர் பெயரில் பணபரிமாற்றம் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் யார் என்பது எனது கட்சிக்காரர்களுக்கு தெரியாது.
இவ்வழக்கில் எனது கட்சிக்காரர்கள் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் பினாமியாக செயல்பட்டனர் என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை. ஆகவே, அவர்களை வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்றார்.