தெலுங்கானாவில் உள்ள ஜெ. வீட்டை ஆட்டைய போட்ட சசி... சொத்து வரி கட்டாததால் நோட்டீஸ்!
தெலுங்கானாவில் உள்ள ஜெயலலிதா வீட்டை தன்னுடையதாக மாற்றியுள்ளார் சசிகலா. அந்த வீட்டுக்கு தற்போது சொத்து வரி கட்ட கோரி சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஹைதராபாத்: தெலுங்கானாவின் செகந்திராபாத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டை தன்னுடையதாக மாற்றியுள்ளார் சசிகலா. ஆனால் இந்த வீட்டுக்கு சொத்து வரி கட்டாததால் செகந்திராபாத் கண்டோமெண்ட் போர்டு சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜெயலலிதா திரைப்படங்களில் நடித்த போது ஹைதராபாத்துக்கு அடிக்கடி சென்று ஓய்வெடுப்பது வழக்கம். அப்போது ஜெடிமெட்லா பகுதியில் 1968-ம் ஆண்டு விவசாய நிலத்தை ஜெயலலிதா வாங்கினார். இதற்கு ஜெஜெ கார்டன் என பெயரிட்டார். பின்னர் திராட்சை தோட்டம் ஒன்றையும் தாய் சந்தியா (வேதா) பெயரில் ஜெயலலிதா வாங்கினார். இந்த திராட்சை தோட்டம் 2007-ம் ஆண்டு பெரும் சர்ச்சையில் சிக்கியது.

அதாவது 1956-59 ஆம் ஆண்டுகளில் ஏழை மக்களுக்கு கொடுக்கப்பட்ட நிலமும் இந்த திராட்சை தோட்டத்தில் அடங்கியுள்ளது என அப்போதைய ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டி அரசு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஸ்ரீநகர் காலனி என்ற பகுதியில் 14,000 சதுர அடியில் ஒரு கட்டிடத்தையும் 1967-ல் ஜெயலலிதா வாங்கியிருந்தார்.
செகந்திராபாத்தின் மாரேட்பள்ளி ராதிகா காலனியில் ஒரு குடியிருப்பு கட்டிடத்தையும் ஜெயலலிதா வாங்கியிருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இந்த குடியிருப்புக்கு சசிகலா நடராஜன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு போர்டு தொங்கவிடப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்துக்கு சொத்து வரியாக ரூ35,424 கட்ட வேண்டும் என தற்போது செகந்திராபாத் கண்டோமெண்ட் போர்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சொத்து வரி கட்டுவது குறித்து கடந்த 2 ஆண்டுகளாக நோட்டீஸ் அனுப்பிய நிலையில் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வரை ஒரு குடும்பம் குடியிருந்தது. கடந்த 3 மாதங்களாக பரமாரிப்பு பணிகள் நடைபெறுவதால் யாரும் இங்கு குடியிருக்கவில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள்.












Click it and Unblock the Notifications