தங்கள் கட்சிக்கு ஓட்டு போடாதவரை கன்னத்தில் அறைந்த நிதிஷ் குமார் கட்சி எம்.எல்.ஏ.
கோபால்கஞ்ச்: பீகாரில் தங்கள் கட்சிக்கு வாக்களிக்காத நபரை அறைந்த ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏ. பப்பு பாண்டே மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பீகாரில் 6 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் நயாகாவ்ன் துல்சியா கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஒருவர் வாக்களித்துவிட்டு வெளியே வந்துள்ளார். அவர் தங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை என்பது அறிந்த குச்யகோட் தொகுதி ஐக்கிய ஜனதாதள கட்சி எம்.எல்.ஏ.வான அம்ரேந்திர குமார் பாண்டே (எ) பப்பு பாண்டே அந்த வாக்காளரை கன்னத்தில் அறைந்துள்ளார்.
மேலும் பாண்டேவின் உதவியாளர்களும் அந்த வாக்காளரை தாக்கியுள்ளனர். அந்த வாக்காளர் காங்கிரஸ் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் பாண்டே மற்றும் அவரது உதவியாளர்கள் 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆனால் பாண்டேவோ சம்பவம் நடந்த இடத்தில் தான் இல்லவே இல்லை என்று தெரிவித்துள்ளார்.