பீகாரில் ஆட்டம் கண்ட இந்தியா கூட்டணி! தேஜஸ்வியை வெலவெலக்க வைத்த வெற்றி நாயகன் நிதிஷ்!
பீகார்: நிதிஷ்குமார் மீதும் அவரது கட்சியின் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், அவரது தலைமையிலான பாஜக கூட்டணி பீகார் மாநிலத்தில் முன்னிலையில் உள்ளது.
லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதலாம் கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில், ஜூன் 1ஆம் தேதி கடைசிக் கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்திருந்தது.

அதனை அடுத்து நேற்றைய முன் தினம் பல்வேறு ஊடகங்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டன. அதில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் மோடி மீண்டும் பிரதமராகப் பதவியேற்பார் என்றும் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கூறி இருந்தன.
அதைப்போலவே இந்தியா முழுவதும் பாஜக இன்று காலை முதலே பாஜக முன்னிலை வகித்து வருகின்றது. தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பின்படி பாஜக 24 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் 219 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றது.
உபியும் பீகாரும் பாஜக அதிகம் நம்பிக்கையோடு இருந்த இரண்டு மாநிலங்கள். அதில் உபியில் பாஜக மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின் படி பீகார் மாநிலத்தில் மிகப் பெரிய அரசியல் மாற்றம் நடக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியது.
எக்ஸிட் போல் முடிவுகள் வெளியான உடனேயே பீகார் முதல்வர் நிதிஷ்குமார் டெல்லி சென்றிருந்தார். டெல்லி கிளம்பும் முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், லோக்சபா தேர்தலில் நிச்சயம் பாஜகவின் என்டிஏ கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெறும் எனக் கூறியிருந்தார்.
அதனையடுத்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகக் கூறப்பட்டது. நிதிஷ்குமார் அதற்குப் பதிலாக மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிப்பார் என்று தகவல்கள் வந்தன.

அவருக்குப் பதிலாகப் பீகார் மாநிலத்திற்கு புதிய முதல்வர் தேர்வு செய்யப்பட உள்ளார் என்றும் சிலர் கணிப்புகளை முன்வைத்து வந்தனர். புதிய முதல்வர் பாஜகவிலிருந்தா அல்லது ஜேடியு கட்சியிலிருந்தா என்பது தெளிவாக இன்னும் தெரியவில்லை.
இருப்பினும், பீகார் சட்டசபையில் பாஜகவுக்கே அதிக சீட் இருப்பதால் அக்கட்சியிலிருந்தே முதல்வராக ஒருவர் நியமிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.
243 இடங்களைக் கொண்ட பீகார் சட்டசபையில் பாஜக தான் தனிப்பெரும் கட்சியாக இருக்கிறது. மொத்தம் 85 சீட்டுகள் பாஜக வசம் இருக்கிறது. அதேநேரம் நிதிஷ்குமாரின் ஜேடியுவிடம் 44 சீட் மட்டுமே இருக்கிறது.
இருப்பினும் நிதிஷ் குமார் தான் முதல்வராக இருந்து வந்த நிலையில், பீகார் அரசியல் மிகப் பெரிய மாற்றத்தைச் சந்திக்க உள்ளதாக நேற்று தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையும் இதை நிரூபிக்கக் கூடியதாக மாறியுள்ளது.
பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மொத்தம் 12 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதேபோல் இந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக 12 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாகச் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மதச்சார்பற்ற இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஒரு தொகுதியில் வென்றுள்ளதாக அறிவித்துள்ளது.
ஆனால், இந்தியா கூட்டணியில் மிக பலம் வாய்ந்த கட்சியாகக் கருதப்பட்ட லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இது மிகப்பெரிய பின்னடைவாக அக்கட்சிக்கும் அதன் தொண்டர்களுக்கு அமைந்துள்ளது.
ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சி 5 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியானது வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. சிபிஎம் (எம்.எல்) கட்சி வேட்பாளர்கள் 2 தொகுதிகளிலும் சுயேச்சை வேட்பாளர் இடத்திலும் முன்னிலையிலிருந்து வருகின்றனர்.
இந்த 2024 தேர்தல் சந்திரபாபு நாயுடுவையும் நிதிஷ்குமாரையும் கிங் மேக்கராக அரசியல் களத்தில் தூக்கி நிறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications