ஜார்க்கண்ட்டில் புதிய பரபரப்பு..பாஜகவை விட்டு 3 மாஜி எம்.எல்.ஏக்கள், சீனியர் 'தலை'கள் கிரேட் எஸ்கேப்
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் 3 முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் மூத்த தலைவர்கள் பலர் பாஜகவில் இருந்து விலகி முதல்வர் ஹேமந்த் சோரன் முன்னிலையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இணைந்துள்ளனர். 3 முறை பாஜக எம்.எல்.ஏ.வாக இருந்த கேதார் ஹஸ்ரா, பாஜகவின் கூட்டணி கட்சியான ஏஜேஎஸ்யூவின் மூத்த தலைவர் உமாகாந்த் ரஜாக் ஆகியோரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் இணைந்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி, எதிர்க்கட்சியான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.

இந்த நிலையில் பாஜக மீது அதிருப்தி அடைந்த அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏக்கள், சீனியர் தலைவர்கள் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் இணைந்து வருகின்றனர். முதல்வர் ஹேமந்த் சோரன் முன்னிலையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் இணைந்த லூயிஸ் மராண்டி, 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஹேமந்த் சோரனை 4,914 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தவர். 2019-ம் ஆண்டு தேர்தலில் லூயிஸ் மராண்டியை 13,188 வாக்குகள் வித்தியாசத்தில் ஹேமந்த் சோரன் தோற்கடித்தார். இருந்த போதும் தும்கா தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்ய 2020-ம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலிலும் லூயிஸ் மராண்டி தோற்கடிக்கப்பட்டார்.
ஹேமந்த் சோரனை தேர்தல் களத்தில் வீழ்த்தியவரான லூயிஸ் மராண்டி தற்போது பாஜகவை விட்டு ஹேமந்த் சோரனிடமே அடைக்கலமாகி இருப்பது முக்கியமான நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது. பாஜகவின் மாநில செய்தித் தொடர்பாளர் சாரங்கியும் தமது கட்சிப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் இணைந்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த ஹரியானா சட்டசபை தேர்தலிலும் பாஜக தலைவர்கள் பலர் காங்கிரஸுக்கு தாவி இருந்தனர். ஆனாலும் ஹரியானா தேர்தலில் பாஜக வெற்றி வாகை சூடியது. காங்கிரஸின் மிதமிஞ்சிய நம்பிக்கையால் ஹரியானாவில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications