ஜார்க்கண்ட்: ஓபிசி-க்கு 27% இடஒதுக்கீடு மசோதா- ஒப்புதல் தராத ஆளுநர்- முட்டி மோதும் சிஎம் சோரன்!
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கு அம்மாநில ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளார். இதனையடுத்து அம்மாநில அனைத்து அரசியல் கட்சியினரையும் அழைத்துக் கொண்டு ஆளுநர் ரமேஷ் பயாஸை நேரில் சந்தித்து மசோதாவுக்கு ஒப்புதல் தர வலியுறுத்தினார் முதல்வர் ஹேமந்த் சோரன்.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலின் போது அம்மாநிலத்தில் நடைமுறையில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு அளவு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி வாக்குறுதி அளித்தது. இந்த வாக்குறுதியை நவம்பர் மாதம் ஜார்க்கண்ட் மாநில அரசு நிறைவேற்றியது. ஜார்க்கண்ட் சட்டசபையில் அம்மாநிலத்தில் மொத்த இடஒதுக்கீடு அளவை 77% ஆக அதிகரிக்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்தது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைமுறையில் இருந்த இடஒதுக்கீடு: எஸ்சி- 10%; எஸ்டி 26%; ஓபிசி 14%; இடபிள்யூஎஸ்- 10%
நவம்பர் மசோதா அடிப்படையிலான இடஒதுக்கீடு: எஸ்சி- 12%; எஸ்டி-28%; இபிசி-15%; ஓபிசி-12%; இடபிள்யூஎஸ்- 10%
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்த இடஒதுக்கீடு அளவு 77% ஆக அதிகரித்துள்ளது. பொதுவாக இடஒதுக்கீடு வழக்குகளில் உச்சநீதிமன்றமானது 50% அளவை தாண்டக் கூடாது என வலியுறுத்திதான் வந்தது. இதனால் பல மாநிலங்களில் ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் இடஒதுக்கீட்டு உரிமை மறுக்கப்பட்ட, பறிக்கப்பட்ட துயரங்கள் நிகழ்ந்தன.
ஆனால் உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் போது, மண்டல் கமிஷன் வழக்கில் இடஒதுக்கீடு அளவு 50%-க்கு அதிகமாகக் கூடாது என்ற தீர்ப்பு பற்றி கவலைப்படவில்லை. ஆகையால் 50% இடஒதுக்கீட்டு வரம்பை உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு மீறுகிறது என்பதை உச்சநீதிமன்றம் கவனத்தில் வைக்கவும் இல்லை. இதனையடுத்து 50% இடஒதுக்கீடு என்ற அளவுகோல் கேள்விக்குள்ளானது.
இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநில அரசு மசோதா நிறைவேற்றி 2 மாதங்களாகியும் அம்மாநில ஆளுநர் இதுவரை ஒப்புதல் தராமல் இருக்கிறார். இது தொடர்பாக ஜார்க்கண்ட் மாநில அரசியல் கட்சித் தலைவர்களுக்கு முதல்வர் ஹேமந்த் சோரன் கடிதம் அனுப்பி இருந்தார். இதனைத் தொடர்ந்து மாநில ஆளுநரை ஹேமந்த் சோரன் தலைமையிலான குழு நேரில் சந்தித்து மசோதாவுக்கு ஒப்புதல் தர வலியுறுத்தியது.
மேலும் தமிழகத்தைப் போல 77% இடஒதுக்கீட்டு சட்டத்தை அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ஹேமந்த் சோரன் கூறியுள்ளார். 1991-96-ம் ஆண்டில் தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இடஒதுக்கீடு அளவு 69% ஆக அதிகரிக்கப்பட்டது. அத்துடன் அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் இதற்கான சட்டம் சேர்க்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் 69% இடஒதுக்கீடுக்கு பாதிப்பு இல்லை என்கிற நிலைமை உள்ளது. இதனால் ஜெயலலிதாவுக்கு சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தை திராவிடர் கழகம் வழங்கியது. தமிழகத்தின் 69% இடஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இப்போதும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழகத்தின் இந்த பாணியை பின்பற்றி இடஒதுக்கீடு சட்டத்துக்கு அரசியல் சாசன பாதுகாப்பு பெறும் முயற்சியை ஹேமந்த் சோரன் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications