பிர்சா முண்டாவைப் போல மாபெரும் தியாகி பாதிரியார் ஸ்டேன் சுவாமி... ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்
ராஞ்சி: ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்களின் உரிமைக்காக வீரஞ்செறிந்த யுத்தம் நடத்தி கைது செய்யப்பட்டு சிறையில் மாண்டுபோன பிர்சா முண்டாவைப் போல பழங்குடி மக்களுக்காக வாழ்நாளை அர்ப்பணித்து சிறையில் மரணித்த மாபெரும் தியாகிதான் பாதிரியார் ஸ்டேன் சுவாமி என்று ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் புகழஞ்சலி செலுத்தினார்.
தமிழ்நாட்டை சேர்ந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமி ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்களின் உரிமைகளுக்கான பணிகளை முன்னெடுத்தவர். 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ல் மகாராஷ்டிராவில் எல்கர் பரிஷத் நடத்திய நிகழ்ச்சியில் பாதிரியார் ஸ்டேன் சுவாமியும் பங்கேற்றார்.

2018 ஜனவரி 1-ந் தேதி மகாராஷ்டிராவின் பீமாகோரேகான் நினைவிடத்தில் பல லட்சக்கணக்கான தலித்துகள் ஒன்று திரண்டனர். 200 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிக்க ஜாதியினரான பேஷ்வா பிராமணர்களை மகர்கள் எனும் தலித் படை வெற்றி கொண்ட 200-ம் ஆம் ஆண்டு நிகழ்ச்சியில் பங்கேற்க தலித்துகள் திரண்டிருந்தனர். அப்போது மிகப் பெரும் வன்முறை வெடித்தது. இந்த வன்முறைக்கு எல்கர் பரிஷத் நிகழ்ச்சியில் பேசியவர்களே காரணம் என கூறி சமூக ஆர்வலர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர்; இவர்களுக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாகவும் அரசு குற்றம்சாட்டியது.
அப்படி கைது செய்யப்பட்டவர்களில் 83 வயது பாதிரியார் ஸ்டேன் சுவாமியும் ஒருவர். அவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் ஜாமீன் மறுக்கப்பட்டது. சிறையில் கொரொனா தொற்று தாக்கி அங்கேயே மரணித்தும் போனார் பாதிரியார் ஸ்டேன் சுவாமி. அவரது மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மரணத்துக்கு மத்திய பா.ஜ.க. அரசுதான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதிரியார் ஸ்டேன் சுவாமிக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் ஹேமந்த் சோரன் பேசியதாவது: அன்று பிர்சா முண்டா பிரிட்டிஷ் ஆட்சியார்களுக்கு எதிராக போராடி சிறையிலேயே மாண்டு போனார்; அவரது வழியில் பழங்குடி மக்களுக்காக போராடிய பாதிரியார் ஸ்டேன்ஸ் சுவாமியும் கைது செய்யபட்டு சிறையில் உயிரிழநதுள்ளார். பிர்சா முண்டாவைப் போல மாபெரும் தியாகி ஸ்டேன் சுவாமி. வருங்கால தலைமுறையினர் பாதிரியார் ஸ்டேன் சுவாமி குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.
பாதிரியார் ஸ்டேன் சுவாமி கைது செய்யப்படாமல் இருந்திருந்தால் இன்று நம்முடன் இருந்திருப்பார். நான் அவரை ஒருமுறைதான் சந்தித்தேன். பழங்குடிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பணியாற்றியவர் பாதிரியார் ஸ்டேன் சுவாமி. ஊபா போன்ற சட்டங்களில் கைது செய்து ஒடுக்கப்படும் மக்களுக்காக போராடுவோரின் குரல்களை ஒடுக்குகிறது தற்போதைய அரசு. ஆனால் மிகப் பெரும் ஊடகங்கள் இந்த பிரச்சனையில் கனத்த மவுனம் சாதிக்கின்றன. பாதிரியார் ஸ்டேன் சுவாமி போன்றவர்கள் எப்போதாவதுதான் நம்மிடையே தோன்றுவார்கள். மகத்தான பணிகள் மூலம் மக்கள் மனங்களில் நிரந்தர இடம்பிடித்துவிடுவார்கள். பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒரு முதல்வர் என்ற அடிப்படையில் பழங்குடிகள், தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நலத்திட்டங்கள் தொடரும். இவ்வாறு ஹேமந்த் சோரன் பேசினார்.












Click it and Unblock the Notifications