காஷ்மீரில் பாக். சுதந்திர தினம் கொண்டாடிய பெண் பிரிவினைவாத தலைவர் 'ஆசியா' கைது
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாக ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத இயக்க பெண் தலைவர் ஆசியா அண்டர்பியை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்களில் ஒருவர் ஆசியா அண்ட்ராபி. துக்த்ரான்- இ- மில்லாத் என்ற இயக்கத்தின் தலைவரான அவர், பாகிஸ்தான் சுதந்திர நாளன்று ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள தனது இல்லத்தின் அருகே அந்நாட்டு கொடியை ஏற்றி அந்நாட்டு தேசிய கீதத்தை பாடி கொண்டாடினார்.
இந்த நிகழ்ச்சி நடைபெற்ற சிறிது நேரத்தில் மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜாமாத் உத் தவா அமைப்பு பாகிஸ்தானில் ஏற்பாடு செய்து இருந்த பொதுக்கூட்டத்தில் தொலைபேசி மூலமாக உரையாற்றினார்.
இதையடுத்து தேசவிரோத செயல்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஆசியா மீது சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் பிரிவு 13-ன் கீழ் ஜம்மு காஷ்மீர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் ஆசியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மார்ச் 23-ந் தேதியும் பாகிஸ்தான் கொடியை ஏந்தி ஆசியா சர்ச்சையில் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.