தேசதுரோக வழக்கு- ஜேஎன்யூ மாணவர்கள் 2 பேருக்கு ஜாமீன் - டெல்லியைவிட்டு வெளியேற தடை!
டெல்லி: தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்ட ஜே.என்.யூ. மாணவர்கள் உமர் காலித், அனிர்பான் பட்டாச்சார்யா ஆகியோருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் 6 மாத இடைக்கால நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக (ஜேஎன்யூ) வளாகத்தில் நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல்குருவுக்காக நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாட்டுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன என இந்து அமைப்புகள் குற்றம்சாட்டின.
இதனைத் தொடர்ந்து ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கன்னையாகுமார், உமர் காலித், பட்டாச்சார்யா உள்ளிட்டோர் மீது தேசதுரோக வழக்கு போடப்பட்டது. முதலில் கன்னையாகுமார் கைது செய்யப்பட்டார். பின்னர் உமர் காலித், பட்டாச்சார்யா நீதிமன்றத்தில் சரணடைந்து கைதாகினர்.
ஆனால் நாட்டுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்படும் வீடியோவில் சில ஊடகங்கள் வேண்டுமென்றே அந்த முழக்கங்களை சேர்த்தது அம்பலமானது. இதனைத் தொடர்ந்து கன்னையாகுமாருக்கு 6 மாத இடைக்கால ஜாமீன் வழங்கியது டெல்லி உயர் நீதிமன்றம்.
தற்போது உமர் காலித், அனிர்பான் பட்டாச்சார்யா ஆகியோருக்கும் 6 மாத இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம். மேலும் இருவரும் டெல்லியை விட்டு வெளியேறக் கூடாது எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.