போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து அரசு பணி பெற்றால் டிஸ்மிஸ் .... சுப்ரீம் கோர்ட் அதிரடி
போலி சான்றிதழ் கொடுத்து அரசு வேலை, பட்டம் வாங்கியது தெரிந்தால் அதை உடனே ரத்து செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லி: போலி சான்றிதழ் கொடுத்து அரசுபணியும், பட்டமும் பெற்றிருந்தால் அது உடனே ரத்து செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது.
போலி சான்றிதழ் மூலம் அரசு பணிகளில் இருப்பவர்கள் குறித்து கடந்த மார்ச் மாதம் லோக்சபாவில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய பணியாளர் நலத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

அப்போது அவர் கூறுகையில் 1,832 பணி நியமனங்கள் போலி சான்றிதழ்களை அடிப்படையாகக் கொண்டு பணி வழங்கப்பட்டுள்ளது. அவற்றுள் 276 பேர் பணியிடை நீக்கமும், பணியிலிருந்து நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். 521 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 1,035 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது என்றார் அவர்.
இதைத் தொடர்ந்து போலி சான்றிதழ் மூலம் ஜாதி ஒதுக்கீட்டு சலுகையை பெற்றுக் கொண்டு அரசு பணியில் உள்ளவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் என்று கடந்த மாதம் மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இது தொடர்பாக மகாராஷ்டிர அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், போலி ஜாதிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது தெரியவந்தால் அந்த பதவியை பறிக்கலாம். இதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
மேலும் போலி சான்றிதழ் கொடுத்து கல்வியில் இடஒதுக்கீடு பெற்று பட்டம் பெற்றிருந்தாலும் அதுவும் ரத்து செய்யப்படும். சம்பந்தப்பட்ட நபர் 20 ஆண்டுகளாக அந்த வேலையில் பணியாற்றியிருந்தாலும் அவர் அப்பதவியிலிருந்து நீக்கப்படுவார்.
பணி அனுபவத்தை கணக்கில் கொண்டு யாரையும் தண்டிக்காமல் விட கூடாது. ஏமாற்றத்தை ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications